நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Thursday 21 January 2010

எங்கோ பார்த்த முகம்


இப்போதெல்லாம் ஏனோ கல்யாணம் , கொண்டாட்டம் என்று வெளிக்கிடவே எனக்கு மனமில்லை. என்ன காரணமென்று சரியாகச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஒன்று நானும் சிங்காரித்து பிள்ளைகளையும் தயார் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுவதாலிருக்கலாம். இல்லை, அங்கே போய் மற்றவர்கள் சுய தம்பட்டங்களுக்கும் ஆவலாதிகளுக்கும் செவி கொடுக்கப் பிடிக்காததாலிருக்கலாம் . அல்லது வயது போகப் போக வந்து குடியேறி விட்ட சோம்பலாகக் கூட இருக்கலாம். இல்லை, இவை எல்லாமே தானோ தெரியவில்லை. அன்றும் அப்படித்தான். தூரத்து உறவினர் வீட்டுக் கல்யாணம். மனமில்லாமற் தான் புறப்பட்டேன்.

நல்ல வேளை என் பால்ய தோழி கலாவை அங்கே கண்டேன்.அவளருகில் போயிருந்து விட்டதால் பழைய கதைகள் கதைத்ததில் நேரம் இனிதே கழிந்தது. திடீரென வந்த ஒருவர் என் தோழியிடம் ' ஹலோ' சொல்ல , அவளும் ' ரவி ,நீங்கள் எங்கே இங்கே ?' என்று கேட்க , நானும் அவரை நிமிர்ந்து பார்த்தேன். சட்டென இவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. அவரும் தோழியும் சில நிமிடங்கள் கதைத்தார்கள். நானும் என் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தேன். ஊகும்... எனக்குப் பிடிபடவேயில்லை. அவருக்குத் தலை வழுக்கை விழத் தொடங்கியிருந்தது . அதை மறைக்கப் பிரயத்தனம் செய்திருந்தார். அந்தக் கண்ணும் மூக்கும் எனக்கு மிகவும் பரீட்சயமாய் இருந்ததால் நிலை கொள்ளாமலிருந்தது. எப்படி இவ்வளவு மறதி எனக்கு வந்தது என்று திட்டிக் கொண்டிருந்தேன். என் நினைவு வர , கலா என்னை ரவிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். '' ரவி, எனது பழைய கம்பெனியில் என்னோடு வேலை செய்தவர் '' என்று ரவியையும் எனக்கு அறிமுகம் செய்தாள். சிரித்தவண்ணம் அவரும் என்னோடு கை குலுக்கினார். அவரது முக பாவத்தில் என்னைத் தெரிந்ததற்கான எந்தச் சாடையுமில்லை. '' உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். நினைவு வரவில்லை'' என்றேன். '' இருக்காது , நான் எவரையும் இலகுவில் மறக்க மாட்டேன். விசேடமாகப் பெண்களை '' என்றார்.

எப்போ மனிதர் விலகுவார் என்று காத்திருந்து , கலாவிடம் '' இந்த ரவியை நான் இளவயதில் பார்த்திருக்கிறேனடி . இந்தக் கண்ணை நன்றாக நினைவிருக்கிறது '' என்றேன். '' சரிதான் ,போ . நீயும் உன் நினைவும் '' என்று சொல்லிச் சிரித்தாள். ஒருமுறை இப்படித்தான் நானும் கலாவும் ஷாப்பிங் போனபோது எங்களோடு படித்த ஒருத்தி பல வருடங்களின் பின்னர் எங்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித் தழுவி சுமார் ஒரு மணி நேரம் கதைத்து , தன சுய சரிதையைச் சொல்லி , என் வீட்டு விலாசம் , தொலைபேசி எண் எல்லாம் வாங்கிப் போன பின்பு , கலாவிடம் '' இவள் யாரடி? எனக்குத் தெரியவில்லை'' என்று நான் கேட்டது , இருவருக்கும் ஒரே சமயம் நினைவு வர, கொல்லென்று சிரித்தோம். அருகில் வந்த என் கணவர் '' கல்யாணத்துக்கெல்லாம் நான் வரவில்லை என்று அடம் பிடிக்க வேண்டியது. தெண்டிக் கொண்டு வந்தால் இங்கே கும்மாளமடிக்க மட்டும் தெரிகிறது '' என்று முணு முணுத்தார்.

எனக்கோ , அதன் பிறகு புலனெங்கும் போகவில்லை. '' இந்த ரவியைப் பற்றித் தெரிந்ததெல்லாம் சொல்லடி. ப்ளீஸ் '' என்றேன். '' உனக்கு இவனைத் தெரியச் சான்ஸ் இல்லையடி. இவன் இங்கிலாந்து வந்து பலவருடமாகுது. இன்ஜினியரிங் கூட இங்கேதான் படித்தான். காதல் கல்யாணம். மனைவி கூட இவனோடு படித்தவள்தான். எனக்குப் பழக்கம். ரொம்ப அழகு. பெயர் கீர்த்திகா.....'' சடாரென சுவிட்ச் தட்டி விட்ட மாதிரி எனக்குள் வெளிச்சம். இன்னும் எனக்கு அறளையாகவில்லை என்னும் ஒரு நிம்மதி வேறு.

கலா பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதியதும் இங்கிலாந்து வந்து விட்டாள். நானும் வேறு பாடசாலைக்கு மாறி விட்டேன். அதனால் எனக்குத் தெரிந்த பாடசாலைத் தோழிகளைக் கலாவுக்குத் தெரியாது. அதன் பின்னர் தான் மேனகாவை நான் சந்தித்தேன். நல்ல குரல் அவளுக்கு. பாடினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். பாடசாலைக்கு அருகில் அவள் வீடும், பல காத தூரத்தில் என் வீடும் இருந்ததால் , நான் பலமுறை அவள் வீட்டில் தங்கிய நாட்கள் கூட இருந்தன. அவள் வீட்டில் ஒரே பிள்ளை. எப்படியும் அவளை டாக்டராக்கி விடவேண்டுமென்ற எண்ணத்தில் அவள் பெற்றோர்கள் இருந்தது அவர்கள் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவளும் முழு மூச்சாய்ப் படித்த படி தான் இருந்தாள். எம்மிருவருக்கும் ஒரு நெருக்கமான நட்பு உண்டான பின்பு தான் மேனகா தன் காதல் விடயம் பற்றி என்னிடம் மூச்சு விட்டாள். அவள் சின்ன வயதிலிருந்தே அவள் மச்சானைக் காதலிப்பதாகச் சொன்ன போது இவளிடம் இத்தனை ரகசியம் இருக்கிறதாவென்று எனக்கு வியப்பாயிருந்தது . பார்வைக்கு அப்பாவி போலவும் குழந்தைத் தனத்துடன் அவள் இருந்ததுதான் காரணம். அவளது அம்மம்மா வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் இருவரையும் சேர்த்துக் கதைத்து சிறுவயதில் அவர்கள் மனதில் காதல் விதையை விதைத்திருக்கிறாள். மேனகா குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததும், வேறு சில குடும்பப் பிரச்சனைகளாலும் இருவர் குடும்பங்களும் பிளவு பட்டுப் போய் விட்டன. அப்போதும் அவர்கள் சந்திப்புக்கு அம்மம்மா உடந்தையாக இருந்திருக்கிறாள். அவர்கள் கல்யாணத்தில் தான் இரு குடும்பங்களும் ஒற்றுமையாகப் போகிறது என்று இருவருக்கும் நம்பிக்கை தந்திருக்கிறாள். ஆனால் அம்மம்மா அண்மையில் கண்ணை முடியதால் இருவரும் கலங்கிப் போயிருந்த நேரமது. போதாத குறைக்கு அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சீமன் வேலைக்குப் போக ஆயத்தம் செய்தபோது அவள் கதி கலங்கிப் போனாள். மேனகாவின் பெற்றோர் அவளை எப்படியும் மேற் படிப்புக்கு அனுப்பக் கங்கணம் கட்டியிருந்தது அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியிருந்தது. மிகக் கவலையுடன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தாள். அவனைச் சந்தித்த போது எப்படியும் படிப்பைத் தொடர வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டதாகவும் சொன்னாள். ஆனால் மிக விரைவில் அவன் சீமன் வேலை கிடைத்துப் புறப்பட்ட போது அலமந்து போனாள். பணம் சம்பாதித்த பின்னர் படிக்கப் போவதாக உறுதி மொழி சொல்லிப் போன அந்த ரவீந்திரன் தான் இந்த ரவி. மேனகா பென்சில் பெட்டி உள்ளே மறைத்து வைத்த அவன் படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

அவன் புறப் பட்டதும் மேனகா வீட்டுக்குக் கடிதம் எழுத முடியாததால் அவனது கடிதங்களைப் பெற்றுத் தர நான் உதவி செய்ய முன் வந்தேன். அப்போ என் ஆங்கிலத்தை முன்னேற்ற ஒரு சில வெளிநாட்டுப் பேனா நண்பர்களைச் சேர்த்திருந்ததால் எனது பெயரில் எனது விலாசத்துக்குக் கடிதம் போடுவதாகத் திட்டம். ஆனால் கடிதப் போக்குவரத்து தொடங்கியதும் ரவியின் கடிதம் வாரமொருமுறை வரத் தொடங்க எங்கள் திட்டத்தில் ஓட்டை விழுந்தது. எங்கள் வீட்டில் கடிதம் பிடி பட்டு விட்டது. ஒருபடியாக என் அம்மாவுக்கு விடயத்தை விளக்கி , மேனகாவை அழைத்து வந்து ,கெஞ்சிக் கூத்தாடி எமது திட்டம் தொடர வழி செய்தோம். அப்போது அவன் அனுப்பிய புகைப் படங்கள் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஒரு படியாக , மேனகாவின் வேண்டுதலுக்கு உடன்பட்டு ரவி இங்கிலாந்து வந்து சேர்ந்தான். அவன் இன்ஜினியரிங் செய்யப் போகிறான் என்று அறிந்ததும் அவள் பூரித்துப் போனதும் கூட எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு வருடங்கள் வாரமொரு முறை வந்து கொண்டிருந்த கடிதங்கள், தாமதமாகி மாதமொரு முறை வரத் தொடங்கிய போது அவளோடு சேர்ந்து நானும் கலங்கிப் போனேன். '' என்னடி? '' என்று கேட்ட போது விம்மியழுதாள். கீர்த்திகா என்ற ஒரு நண்பியைப் பற்றி அவன் எழுதியதாகவும் , ஒவ்வொரு கடிதத்திலும் ஒரு வரியாவது அவளைப் பற்றியெழுதுவதாகவும் சொல்லி வேதனைப் பட்டாள். '' அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது நீ மனதைப் போட்டுக் குழப்பாதே '' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் என் மனதிலும் பாரமாய் இருந்தது. அடுத்த கடிதத்தில் கீர்த்திகா போட்டோவும் வந்தது. சுருள் முடியுடன் மிக அழகாகச் சிரித்த வண்ணமிருந்தாள். அந்தப் படம் என் அடி மனத்தில் ஒரு கிலியைத் தந்தாலும் '' நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மேனகா மிக அழகாக இருக்கிறாள் '' என்று கீர்த்திகா சொன்னதாக ரவி எழுதியிருந்ததில் ஆசுவாசப் பட்டுக் கொண்டாள்.
ஆனால் ஒரு சில மாதங்களில் இடிபோல் வந்த அந்தக் கடிதம் அவளைத் துடி துடிக்க வைத்து விட்டது. பல வருடங்களாக சிறுகச் சிறுக அவள் மனதில் அழகாகக் கட்டி யெழுப்பிய அந்தக் காதல் சாம்ராஜ்யத்தை ஒரு சில வரிகளால் சின்னா பின்னமாக்கி விட்டான் ரவி. கீர்த்திகாவுடன் நட்பாகத் தான் பழகியதாகவும், ஆனால் இப்போ கழன்று கொள்ள முடியாத படி மாட்டிக் கொண்டதாகவும் , அவளைக் கல்யாணம் செய்வதை விட வேறு வழியில்லையென்றும் ஏதேதோ எழுதியிருந்தான் இந்தக் கிராதகன். அது போதாதென்று மேனகாவைத் தான் மறக்க முடியாதென்றும் , சாகும் வரை அவள் தன் நெஞ்சில் குடியிருப்பாள் என்றும் பசப்பு வார்த்தை வேறு. அந்தக் கடிதத்தை நான் பல முறை படித்திருந்தேன்.

அந்த பேரதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மேனகா படுத்த படுக்கையாக அவள் பெற்றோருக்கு விடயம் தெரிய வந்தது. நல்ல வேளை ,கடிதம் என் வீட்டுக்கு வந்த விடயம் வெளிப் படாததால் அப்போ நான் பிழைத்தேன். அப்போது கூட '' ரவி பாவம். அந்தக் கீர்த்திகா சனியன் மயக்கி விட்டாள்.'' என்று அவள் புலம்பியதும் நினைவில் வந்தது. அவளது காதலுக்கு இருந்த ஒரே சாட்சி நானென்பதாலோ என்னவோ என்னைக் கண்டதும் அவள் அழ ஆரம்பித்தாள். அதனால் அவளைப் போய்ப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டேன். காலவோட்டத்தில் எனக்கு மேனகா தொடர்பே இல்லாமல் போய் விட்டது.

இப்போ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்தத் துரோகியைக் கண்டதும் , மனம் பட படவென அடித்துக் கொண்டது. அவனுக்கு என் பெயரும் விலாசமும் மட்டும் தான் தெரியும். நான் எப்பிடியிருப்பேன் என்று தெரியாது. என்னால் சும்மா விட முடியவில்லை. ஏதாவது பண்ண வேண்டும் என்று சிந்தித்தபடியே இருந்தேன். தானாகவே சந்தர்ப்பம் அமைந்தது. நாங்கள் எல்லோரிடமும் விடை பெற்று வெளியே வந்த போது ரவி தம்பதிகள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். வம்பை விலைக்கு வாங்கியது போல் '' இப்போ என்னை எங்கே கண்டீர்கள் ? என்று நினைவிருக்கிறதா?'' என்று வேறு என் வாயைக் கிண்டிய ரவியிடம். '' எனக்கு நல்ல நினைவிருக்கு. '' என்று சொல்லி என் பெயரையும் எனது ஊர் விலாசத்தையும் சொல்லி,'' நீங்கள் தான் எதையும் மறக்க மாட்டீர்களே '' என்றேன்.

திடுக்கிட்டு ,முகங் கறுத்து , பேயறைந்தவன் போல் நின்ற ரவியைப் பார்த்துச் சிரித்த படி நான் வந்து விட்டேன். என்னையும் ரவியையும் மாறி மாறிப் பார்த்த படி திகைத்துப் போய் நின்ற கீர்த்திகாவைப் பார்க்கவும் சுவாரசிய மாகத்தான் இருந்தது. காதலித்து ஏமாற்றிய அந்தக் கயவனுக்கும், உயிருக்குயிராய் ஒருத்தி இங்கே காத்திருக்கிறாள் என்று அறிந்த பின்னரும் அவள் கனவை அபகரித்த அந்தக் கல் நெஞ்சக் காரிக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. ஆனாலும் என் அடி மனதில் சின்னதாய் ஒரு நிம்மதி.


.

41 comments:

Radhakrishnan said...

ஆ! இது கதைதானே!

பிரமாதமாக எழுதி இருக்கீங்க.

காதல் தொலைத்த காரிகை, காதல் பறித்த காரிகை.

ப்ரியமுடன் வசந்த் said...

கதையா நடந்த நிகழ்வா ஜெஸ்ஸம்மா?

எப்படியிருப்பினும் மேனகா இப்போ எப்படியிருப்பாங்க எங்க இருப்பாங்க?

இது போல ஏமாற்றுபேர்வழிகளான காதலன் காதலி இருவரையும் இன்றைய காலத்தில் நகரங்களில் காணலாம்...

நல்ல நடையில எழுதியிருக்கீங்க ஜெஸ்...!

ப்ரியமுடன் வசந்த் said...

சுனைனா இருக்குற போட்டோ நல்லா இருக்கு...

ராமலக்ஷ்மி said...

அழகான நடையில் அற்புதமாக கொண்டு சென்றுள்ளீர்கள். அருமை ஜெஸ்வந்தி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
ஆ! இது கதைதானே!
பிரமாதமாக எழுதி இருக்கீங்க.
காதல் தொலைத்த காரிகை, காதல் பறித்த காரிகை.//
வாங்க நண்பரே! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...

கதையா நடந்த நிகழ்வா ஜெஸ்ஸம்மா?
எப்படியிருப்பினும் மேனகா இப்போ எப்படியிருப்பாங்க எங்க இருப்பாங்க?
இது போல ஏமாற்றுபேர்வழிகளான காதலன் காதலி இருவரையும் இன்றைய காலத்தில் நகரங்களில் காணலாம்... நல்ல நடையில எழுதியிருக்கீங்க ஜெஸ்...! //

ஹ ஹ ஹா ..வசந்த் ..இந்தக் கதை ஒவ்வொரு தெருவிலும் தான் நடந்து கொண்டிருக்கிறது. நடக்காததை எழுதவில்லையே! மேனகா நல்லவள் ..உலகத்தில் ஒரு மூலையில் நன்றாகத் தான் இருப்பாள்.

ஹேமா said...

ஜெஸி எங்கள் ஊரில் எங்கள் நாட்டில் அடிக்கடி நடக்கிற கதைதான் என்றாலும் மனம் மேனகாவுக்காக ஒரு முறை வருந்தியது.
உங்கள் துணிச்சலே துணிச்சல்.

பா.ராஜாராம் said...

என்ன ஜெஸ் நீங்க?

எவ்வளவு அருமையான நடை தெரியுமா?

எழுதுங்க மக்கா.அது போதும்.

கமலேஷ் said...

அய்யோ...ரொம்ப அருமையான நடை....விருவிருப்பா போய்க்கிட்டே இருக்கு..இந்த கதை படிக்கும் போது யாரவது வந்து படிக்க விடாம தொல்ல பன்னா நிட்சயமாக கோபம் வரும் அவ்வளவவு அழகா கதை ஓட்டம் இருக்கு...எப்படி யோசிக்றீங்க இப்படி எல்லாம்...வாழ்த்துக்கள்...

ரிஷபன் said...

எனக்கு என்னவோ அவன் இரண்டு பேரையும்தான் ஏமாத்தியிருப்பான்னு தோணுது..

நட்புடன் ஜமால் said...

கதை என்று சொல்ல இயலாத வகையில் இருக்கு எழுத்தோட்டம் - கலக்குங்க ஜெஸ்

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு...

இராயர் said...

இது கதை போல தெரியவில்லை
நல்ல முடிவு
உங்களின் முந்தைய ஐம்பவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கும்

அன்புடன்
இராயர்

ஜெயா said...

நல்ல கதை.வாழ்த்துகள் ...

S.A. நவாஸுதீன் said...

அருமையான தொய்வில்லாத நடை. நல்லா சொல்லி இருக்கீங்க ஜெஸ்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பிரியமுடன்...வசந்த் said...
சுனைனா இருக்குற போட்டோ நல்லா இருக்கு... //

எனக்கும் ரொம்பப் பிடிச்சுதப்பா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ராமலக்ஷ்மி said...
அழகான நடையில் அற்புதமாக கொண்டு சென்றுள்ளீர்கள். அருமை ஜெஸ்வந்தி.//

கருத்துக்கு நன்றி தோழி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஹேமா said...

ஜெஸி எங்கள் ஊரில் எங்கள் நாட்டில் அடிக்கடி நடக்கிற கதைதான் என்றாலும் மனம் மேனகாவுக்காக ஒரு முறை வருந்தியது. உங்கள் துணிச்சலே துணிச்சல். //

வாங்க ஹேமா. இது எனது அனுபவம் என்று முடிவே பண்ணி விட்டீர்கள் என்று தெரிகிறது. ஹ ஹா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...

என்ன ஜெஸ் நீங்க?
எவ்வளவு அருமையான நடை தெரியுமா?
எழுதுங்க மக்கா.அது போதும்.//

வாங்க ராஜா. கருத்துக்கு நன்றி. நீங்கள் தரும் ஊக்கம் தான் எழுத வைக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கமலேஷ் said...
அய்யோ...ரொம்ப அருமையான நடை....விருவிருப்பா போய்க்கிட்டே இருக்கு..இந்த கதை படிக்கும் போது யாரவது வந்து படிக்க விடாம தொல்ல பன்னா நிட்சயமாக கோபம் வரும் .அவ்வளவு அழகா கதை ஓட்டம் இருக்கு...எப்படி யோசிக்றீங்க இப்படி எல்லாம்...வாழ்த்துக்கள்...//

வாங்க கமலேஷ். உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ரிஷபன் said...
எனக்கு என்னவோ அவன் இரண்டு பேரையும்தான் ஏமாத்தியிருப்பான்னு தோணுது..//

அடடே ! என் கதையில் எங்கேயோ ஓட்டை என்கிறீர்களா? கீர்த்திகாவுக்கு விடயம் தெரியும் என்பதை வேறு விதமாக வலியுறுத்தியிருக்க வேண்டும் என்று இப்போபுரிகிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நட்புடன் ஜமால் said...
கதை என்று சொல்ல இயலாத வகையில் இருக்கு எழுத்தோட்டம் - கலக்குங்க ஜெஸ் //

வாங்க ஜமால். தொடர்ந்து வந்து படிப்பதற்கும் ஊக்கம் தருவதற்கும் மிக்க நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அண்ணாமலையான் said...
நல்லாருக்கு...//

வாங்க அண்ணாமலையான். வந்து படித்ததற்கு மிக்க நன்றி.

மாதேவி said...

கதையின் நடை அருமையாக இருக்கிறது.

Anonymous said...

மேனகா பாவம் இல்ல... என்னைப்போல் ஒருவன் கண்டிப்பா நல்லா பாத்துப்பான் அவள... நீ கவலப்படாத... (சிரிப்புக்காக)

படிச்சு முடிக்கும்போது ஒரு வலி ஒட்டிக்கொண்டது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இராயர் அமிர்தலிங்கம் said...

இது கதை போல தெரியவில்லை .நல்ல முடிவு
உங்களின் முந்தைய ஐம்பவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கும்
அன்புடன் --இராயர்//

நன்றி இராயர். திருமண வாழ்த்துகள்.
Have a safe journey.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//ஜெயா said...
நல்ல கதை.வாழ்த்துகள் ...//

நன்றி ஜெயா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//S.A. நவாஸுதீன் said...
அருமையான தொய்வில்லாத நடை. நல்லா சொல்லி இருக்கீங்க ஜெஸ்.//

நன்றி நவாஸ். தொடர்ந்த உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//மாதேவி said...
கதையின் நடை அருமையாக இருக்கிறது.//

மிக்க நன்றி மாதேவி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இந்திராகிசரவணன் said...
மேனகா பாவம் இல்ல... என்னைப்போல் ஒருவன் கண்டிப்பா நல்லா பாத்துப்பான் அவள... நீ கவலப்படாத... (சிரிப்புக்காக)
படிச்சு முடிக்கும்போது ஒரு வலி ஒட்டிக்கொண்டது...//

உண்மையாகத்தான் சொன்னீர்கள் என்று ஒரு கணம் மகிழ்ந்தேன். சிரிப்புக்காக என்று சொல்லி அந்த மகிழ்ச்சியைப் பறித்து விட்டீர்களே! ஹ ஹ ஹா

Kala said...

ஹேமாவுக்கும் ஒரு கலா
ஜெஸிக்கும் ஒரு கலா ஏன் என்னைப்
பந்தாடுகிறீகள் ?

ஜெஸி எத்தனையோ ரவிகள் இவரைப்போல்
உலகில் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!

இந்தக் காதல் இருக்குதே அப்பப்பா.......நம்பமுடியாத
ஒரு பச்சோந்தி{புனிதக் காதலும் உண்டு}

இது நிட்சயம் நிஐமான வாழ்வின் வலி
தயவுசெய்து மேனகாவைப் பற்றி அறிய
முயற்சியுங்கள்!!

பகிர்ந்தமைக்கு நன்றி ஜெஸிம்மா!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாங்க கலா. மனதுக்குப் பிடித்த பெயர்களைக் கதாபாத்திரங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது என்பது தான் உண்மை. பந்தாடவில்லை அம்மாடி.
காதல் புனிதமானது. ஆனால் இப்படிப் பச்சோந்திகள் அதன் புனிதத்தைக் கெடுத்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வந்தேன். நீங்க வேறு , வலி இத்தனை இருந்தால் மேனகாவைத் தேடாமல் இருப்பேனா?

நேசமித்ரன் said...

நீருள் கால்கள் அசைவது தெரியாமல் நீர் பறவைகள் இலவம் காற்றில் மிதப்பது போல என்ன ஒரு நடை

நிறைய எழுதுங்க ஜெஸ்வந்தி

கதையில் இன்னும் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்

:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாங்க நேசன். பாராட்டுக்கு நன்றி நண்பரே. நீங்கள் சொல்வது சரிதான். கதையில் கவனம் சற்றுத் தேவை என்று தான் தோன்றுகிறது.

அம்பிகா said...

புனைவு மாதிரியே இல்லை. நல்ல சரளமான நடை. நல்லா இருக்குங்க

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அம்பிகா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல நடை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@ T.V.Radhakrishnan..

நன்றி ராதாகிருஷ்ணன்.

பா.ராஜாராம் said...

ஜெஸ்,

ஆற்றொழுக்க நடை.பார்முக்கு வந்துட்டீங்க.சந்தோசம் மக்கா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

@ ராஜாராம்
எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம் தான். நன்றி நண்பரே.

Anonymous said...

நெஞ்சைப் பிழிந்துவிட்டது. மேற்படிப்புக்கு வரும் போது கேட்பார் யாருமில்லை. அவுத்துவிட்டது மாதிரி இருக்கும். சிங்கு சிங்கு என்று ஆடவேண்டும் மாதிரி இருக்கும். வீட்டில் சொல்லி சொல்லி வளர்த்த பிள்ளைகள் பிழைத்துக் கொள்ள மற்றவர்கள் இப்படி ஆகுகிறார்கள். ஆனால் துரோகி நீடூழி வாழ்வதும் நல்லவன் தாழ்வதுமே இப்போதய நிலைமை என்பதால் நல்லவனாக இருந்து எதற்கு கஷ்டப்பட வேண்டும் என்ற மனோபாவம் வரலாம். கலிகாலம். வேற என்னத்த சொல்ல.

By the way, அறளையாகவில்லை, அலமந்து போனாள் போன்ற சொற்களை இந்தியர்கள் பாவித்து கேட்டதில்லை. எங்கள் ஊரில் சாதாரணமாக உபயோகிப்பவை.