நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Tuesday 25 August 2009

ஜேர்மனியில் சில நாட்கள்

அண்மையில் என் குடும்பத்துடன் ஜேர்மனி போயிருந்தேன். தற்போது என் தாயார் அங்கு இருப்பதால் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறேன். இம்முறை ஒல்லாந்து போய் அங்கு என் சித்தியுடன் சில மணி தங்கி பயணத்தைத் தொடர எண்ணினோம். எப்போதும் காரில் தான் பயணம் செய்கிறோம். லண்டனிலிருந்து கிட்டத்தட்ட பதின் மூன்று மணித்தியால ஓட்டம். எங்களைப் பொறுத்தவரை விமானப் பயணத்தை விட கார்ப் பயணம் மிகவும் சுவாரசியமானது. பல வித சிற்றுண்டிகளும் , கோப்பி, தேனீர் எல்லாம் தயாரித்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது.
மாலையில் சிறிது நேரம் கண்ணயர்ந்து ஓய்வெடுத்திருந்ததால் எல்லோரும் உற்சாகமாகத்தான் இருந்தோம்.
எங்கள் வீட்டிலிருந்து டோவெர் (Dover) துறைமுகம் சுமார் மூன்று மணி ஓட்டம்.
நான் தான் காரோட்டினேன். இங்கிலாந்தில் மட்டும் தான் என்னால் ஓட்ட முடியும் . ஐரோப்பிய விதிமுறைகள் வேறுபட்டவை என்பதால், அங்கு காரோட்ட எப்பவுமே நான் முயலவில்லை . எமக்குப் பிடித்த பாடல்களுள்ள ஒலித்தட்டுக்கள் எங்கள் பயணத்தை ரம்மியமாக்கின. எப்போதும் பாடல்களுடன் சேர்ந்து நாங்களும் பாடுவோம். காரோட்டுபவர் நித்திரை கொள்ளாமல் இருக்க நாங்கள் கையாளும் முறையிது. பொதுவாக டூயட் பாட்டுக்களைத் தெரிவதால் ஒருவர் முறைக்கு அவர் பாடாவிட்டால் நித்திரையாகி விட்டார் என்று அறிந்து காரை நிறுத்தி ஓய்வெடுப்பொம். டோவெரிலிருந்து கப்பல் ( ferry) மூலம் கலை ( Calais ) துறைமுகத்தை வந்தடைந்தோம்.

அப்போ நன்கு விடியத் தொடங்கியிருந்தது. கப்பலில் ஒன்றரை மணிநேரம் சிறிது கண்ணயர்ந்ததால் எல்லோரும் விழிப்பாக இருந்தோம். நாம் கடந்து சென்ற அழகான இயற்கைக் காட்சிகளையும் ரசிகக்u நிலையில் இருந்தோம். பலமுறை நிறுத்தி இளைப்பாறியதால் மதிய நேரம்தான் என் சித்தி வீட்டையடைந்தோம். என் சித்தியை என் கணவரும் , பிள்ளைகளும் முதல் முறை நேரில் காண்கிறார்கள். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
அங்கு மதிய உணவின் பின்னர் சற்று தூங்கி எழுந்தபின்னர் பிற்பகல் ஜேர்மனியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம்.

பலமுறை நாங்கள் அங்கு சென்றதாலும், ஏற்கெனவே பிரபல உல்லாசத் தலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டதாலும், இம்முறை எங்கும் போவதில்லை என்று நினைத்திருந்தோம். ஆனாலும் என் தம்பியின் உந்துதலால்
நாம் ஏற்கனெவே பார்வையிடாத சில உள்ளூர் தலங்களைப் பார்வையிடலாமெனப் புறப்பட்டோம். முதல் நாள் ஹடாமர் என்ற இடத்தில் உள்ள ரோஸ் தோட்டத்தைப் பார்வையிட்டோம். இது ஒரு மலை உச்சியில் ஒரு சிறிய தேவாலயததுக் கருகிலிருக்கிறது. இதன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மிகச் சிரமப் பட்டு அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கிறார்கள் என்று தோன்றியது. நான் கண்ட அந்த அழகு வனத்தின் காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் புகைப் படமாக்கினேன்.


அடுத்தநாள் சிலமைல் தூரத்தில் இருந்த லிம்பேர்க் என்ற நரத்திலுள்ள பதின் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ,ஒரு மலை உச்சியில் அமைந்த தேவாலயத்தைத் தரிசித்தோம். இது பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டாலும் உள்ளே காணும் கலை நுட்ப வேலைப் பாடுகள் மிகவும் ஆச்சரியப் படுத்தும் வகையில் இருக்கின்றன. அங்கிருந்து புறப்பட்டு மலையடிவாரத்திலுள்ள நதிக்கரையை வந்து சேர்ந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்த அருவி, பச்சைப் பசேலென இருந்த வெளி, அத்தனையும் இணைந்து தந்த ரம்மியமான சூழல் , மெய் மறக்க வைக்கும் இயற்கைக் காட்சி, என் மனதை இலேசாக்கி இயற்கையின் விந்தையை மெச்சிக் கொள்ள வைத்தன.





முன்பு நாங்கள் ஜேர்மனி வந்திருந்த தருணங்களில், எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் அவசரத்துடன், பல இடங்களை குறிப்பிட்ட நாட்களில் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. இப்படி சாவகாசமாக நடந்து திரிந்து இயற்கையை ரசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'இத்தனை தூரம் வந்து விட்டோம், அருவியில் வலித்துச் செல்லும் படகில் ஒரு மணி நேரம் போகலாம் ' என்று என் தம்பி சொல்ல, எல்லோரும் அதற்கு இணங்கினோம். சிறிது தொலைவிலுள்ள படகுத் தரிப்பை நாங்கள் அடைந்தபோது நான் கண்ட காட்சியை கிழே புகைப் படத்தில் பாருங்கள்.


இந்தக் காட்சி என்னைச் சிந்திக்க வைத்து கண்கலங்க வைத்து விட்டது. அருவிக்கு மறுபுறத்தில் உல்லாசப் பயணிகள் தங்கியிருந்த காம்பிங் சைட் ( camping site) தான் அதற்குக் காரணம். மாளிகை மாதிரி வீடுகளில் , பல பல உல்லாச வசதிகளுடன் வாழும் மக்கள் , அந்த வாழ்க்கையில் சலிப்படைந்து , விரக்தியினால் , ஒரு மாறுதலுக்காக இங்கே வருகிறார்கள். இங்கே கூடாரங்களில் சில வாரங்கள் இருந்து, பக்கத்திலிருந்த அருவியில் மீன் பிடித்து, ஆதி கால மனிதர்கள் போல் தணலில் உணவைச் சுட்டுத் தின்று கொண்டு இளைப்பாறுகிறார்கள். இது இங்கு சகஜமானாலும் அந்தக் காட்சி , என் தாய் நாட்டில் கல்முனைக் கடற்கரையோரத்தில் நான் கண்ட காட்சியை எனக்கு நினைவு படுத்தி விட்டது. சுனாமி அழிவுக்குப் பின்னால் ஒரு வருடம் கழித்து நான் ஊர் போயிருந்த போது , ஒரு தகரக் கூடாரமே அவர்கள் வீடாக அந்த வருடம் முழுவதும் , நெருப்பு வெயிலில் அவிந்து கொண்டிருந்த பல குடும்பங்களை நான் அங்கு கண்டேன்.அந்தக் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. எத்தனை பேர் பணத்தை அள்ளி இறைத்தும் பாதிக்கப் பட்ட அந்த துரதிஸ்ட சாலிகள் வாழ்க்கை மாறவேயில்லை. இற்றைவரை அந்த இயற்கைக் காட்சியை ரசித்த என்னால் அதற்கு மேலும் எதனையும் ரசிக்க முடியவில்லை.
எந்தக் காட்சியும், பார்ப்பவர் கண்ணையும், அவர்கள் நெஞ்சையும் பொறுத்துத் தானே ரம்மியமாகிறது. என்னிடம் தெரிந்த இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குக் காரணம் தெரியவில்லை. அதைச் சொல்லி அவர்கள் மனதை நோகடிக்கவும் நான் விரும்பவில்லை. விந்தையான உலகம் தான். அவர்கள் அங்கே அப்படி! இவர்கள் இங்கே இப்படி!


.

39 comments:

துபாய் ராஜா said...

சந்தோஷமாக ஆரம்பித்து சங்கடமாக முடித்துவிட்டீர்கள்.

sakthi said...

பயணக்கட்டுரை விவரித்து உள்ள விதம் அழகு

ஆனாலும் கடைசியில் சற்று மனம் வலிக்கின்றது

Ungalranga said...

அதெப்படி...உங்களின் பயணக் கட்டுரை என் மனதை நிறைத்து நிற்கிறது?

ஹூம்.. நம் நாட்டின் நிலைமையினை எண்ணி விழும் உங்கள் கண்ணீருக்கு என்னிடம் ஆறுதல் இல்லை என்பதில் நானும் வருந்துகிறேன்..

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

மாளிகை மாதிரி வீடுகளில் , பல பல உல்லாச வசதிகளுடன் வாழும் மக்கள் , அந்த வாழ்க்கையில் சலிப்படைந்து , விரக்தியினால் , ஒரு மாறுதலுக்காக இங்கே வருகிறார்கள்]]

இக்கறைகளுக்கு அக்கறைகள் எப்பொழுதும் பச்சை ...

அ.மு.செய்யது said...

சுவார‌ஸிய‌மாக‌ இருந்த‌து உங்க‌ள் ப‌ய‌ண‌க்க‌ட்டுரை.

க‌டைசில‌ அந்த‌ ப‌த்தி இல்லாமலேயே இருந்திருக்க‌லாம் போல‌ தோணுது.

ஹேமா said...

ஜெஸி ஏதோ எங்கள் இத்தனை நெரிசலுக்குள்ளும் சிலசமயங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள இப்படி போய் வரவேண்டி இருக்கு,அதற்காக எங்கள் மக்களை மண்ணை மறந்தவர்கள் அல்ல நாங்கள்.உங்கள் விடுமுறையும் அப்படியே அமைந்திருக்கிறது.எங்கும் எதிலும் எம் வலிதான் மிஞ்சிக் கிடக்கிறது தோழி.

ப்ரியமுடன் வசந்த் said...

புகைப்படங்கள் அருமையா இருக்கு........

அமுதா கிருஷ்ணா said...

தோட்டம் மிக அருமை சகோதரி..மிக விரைவில் நல்லது உங்கள் நாட்டில் நடக்கும்.கஷ்டப்படுபவர்கள் எல்லா நாளும் கஷ்டப்பட கடவுள் அனுமதிக்க மாட்டார்.

தேவன் said...

///ஒரு தகரக் கூடாரமே அவர்கள் வீடாக அந்த வருடம் முழுவதும் , நெருப்பு வெயிலில் அவிந்து கொண்டிருந்த பல குடும்பங்களை நான் அங்கு கண்டேன்///

///அவர்கள் அங்கே அப்படி! இவர்கள் இங்கே இப்படி///

கனத்த நிமிடங்களை உருவாக்கி விட்டீர்கள் ஜெஸ்வந்தி அவர்களே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

துபாய் ராஜா
============
வாங்க நண்பரே! சங்கடப் படுத்துவதற்காக அப்படி எழுதவில்லை. நான் கண்டவற்றையும் உணர்ந்தவற்றையும் பகிரும் நோக்கம் மட்டும் தான்.
sakthi
======
வாங்க சக்தி, நினைவுகளை விரட்டுவது கடினம் தோழி. நாங்கள் எங்கு சென்றாலும் அவற்றையும் சுமந்து கொண்டுதானே செல்கிறோம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரங்கன்
======
வாங்க ரங்கா! அடடே , உங்களுக்கு பதிவுகள் படிக்கவும் கருத்துப் போடவும் நேரமிருக்கிறதா? ரசித்ததற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

நட்புடன் ஜமால்
==============
வாங்க ஜமால். சரியாகச் சொன்னீர்கள். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அ.மு.செய்யது
==============
வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி. ஜேர்மனியில் உள்ள இடங்களை கூகிள் தாத்தாவிடம் விளக்கமாக அறிந்து விடலாம். பயணம் செல்பவரின் அனுபவமும் ,உணர்வுகளின் தான் அந்தத் தாத்தாவிடம் கிடையாது.

அப்துல்மாலிக் said...

உங்க கூட சேர்ந்து நானும் பயணித்த திருப்தி உங்க பதிவுலே

தொடருங்க‌

R.Gopi said...

ந‌ல்லா இருந்த‌து ஜெஸ்... நீங்க‌ சொன்ன‌ மாதிரி அந்த‌ ஃபோட்டோ பிர‌மாத‌ம்... கூட‌வே அந்த‌ காம்பிங் சைட்..

கடைசியில மனசு கனத்து போச்சுங்க....

Anonymous said...

உன்னோடு பயணம் செய்த மாதிரி இருந்தது கட்டுரையும் காட்சியும்...கடைசி வரிகள் ஆம் ஒட்டு மொத்த பயணத்தின் சுவரஸ்யமும் ஒடுங்கிவிட்டது.ஆனால் வலியை உணர்ந்து நீ ஒரு நல்ல மனமுள்ள மனிதன் என சொல்லிவிட்டாய் ஜெஸ்.... காலம் மாறாதுடா காத்திருப்பில் பயனில்லை கண்ணீர் மட்டுமே மிச்சமாய்...

S.A. நவாஸுதீன் said...

நிறைவான பயணக்கட்டுரை. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ஜெஸ்வந்தி. கடைசி வரிகளில் தெறிக்கும் வலிகளை உணர முடிகிறது.

SUFFIX said...

நல்ல பயணக் கட்டுரை, நல்ல படம், அந்த முதல் படத்தை கிளிக்கி save செய்து வைத்து விட்டேன். உணர்வுப்பூர்வமா முடிச்சு இருக்கிங்க.

குடந்தை அன்புமணி said...

பயணங்கள் சுகமானது. நம்மை புதுப்பித்துக் கொள்ள பயணங்கள் நிச்சயம் உதவும். தங்கள் பயணக்கட்டுரை அந்த அனுபவத்தை கொடுத்தது. படங்களும் அருமை. மனிதனுக்கு ஏற்படும் துன்பங்கள் நிலையானதல்ல... மேகமூட்டத்தைப் போல அது. நிச்சயம் விலகும். வானம் வெளுக்கும். நம்பிக்கையாய் இருங்கள்.

நேசமித்ரன் said...

மனசுக்கு ரொம்ப பக்கத்தில் நிற்கும் உங்களின் பதிவுகள்

துவக்கம் அழகு .
படங்கள் அழகு ஞ்சுகின்றன ..
இறுதிவரிகள் பாரம் தான் ஜெஸ்வந்தி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஹேமா
=======
வாங்க ஹேமா! உங்கள் ஆறுதலான வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. நன்றி தோழி.

பிரியமுடன்...வசந்த்
===================
வாங்க வசந்த்! ரசித்ததற்கு நன்றி.

Kavinaya said...

புகைப்படங்கள் அழகு!

//எந்தக் காட்சியும், பார்ப்பவர் கண்ணையும், அவர்கள் நெஞ்சையும் பொறுத்துத் தானே ரம்மியமாகிறது.//

//விந்தையான உலகம் தான்.//

உண்மை. இதைப் போன்ற தருணங்களில் நம்பிக்கையும் பிரார்த்தனையும்தான் கை கொடுக்கக் கூடியது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அமுதா கிருஷ்ணா
==================
உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி தோழி. இதைவிட அழகான படங்கள் கூகிள் இல இருக்கு. ஆனால் நான் எடுத்த படம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது.

Kesavan
=======
உங்கள் வருகைக்கும்.அழகான கருத்துக்கும் நன்றி நண்பரே. என்னோடு சேர்ந்து நீங்களும் அந்த வேதனையை உணர்ந்ததில் எனக்கு ஒரு மன ஆறுதல் கூட.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தமிழரசி
========
வாங்க தோழி, நான் கண்ட காட்சிகள் அழகாக இருந்தனவோ, நான் ரசிக்கும் மூடில் இருந்ததேனோ தெரியவில்லை. பார்த்த இடமெல்லாம் அழகாக இருந்தது. எனக்கும் உங்கள் கருத்தைப் படிக்கும் போது நீங்களும் கூட வந்த உணர்வு.

S.A. நவாஸுதீன்
===============

வாங்க நண்பரே.என் பயணக் கட்டுரையை ரசித்துப் படித்ததற்கு நன்றி. நீங்கள் தரும் ஊக்கம் மனதை நிறைக்கிறது.

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அபுஅஃப்ஸர்
===========
என்னோடு சேர்ந்து ரசித்ததற்கு நன்றி நண்பரே.எனக்குக் கூட்டமாகப் போன மன நிறைவு.

ஷ‌ஃபிக்ஸ்
=========
வாங்க நண்பரே. அடடே! உங்களை அந்தப் படம் மிகவும் கவர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நான் எடுக்காத காட்ச்சிகளைக் காண இங்கே கிளிக் பண்ணுங்கள்.
http://images.google.co.uk/images?hl=en&source=hp&q=cathedral+limburg+germany&btnG=Search+Images&gbv=2&aq=f&oq=

தமிழ். சரவணன் said...

அருமையான பயனக்கட்டுரை ஆனால் இறுதியல் மனம் கணத்துவிட்டது... இரக்கம்மிலலாத இயற்கை...

Shan Nalliah / GANDHIYIST said...

Great!Travelling always fascinate me!I hope to write my travel experinces soon!
sarvadesatamilercenter.blogspot.com

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

R.Gopi
======
என்னோடு சேர்ந்து ரசித்ததற்கு நன்றி கோபி.

குடந்தை அன்புமணி
==================
உண்மைதான் அன்புமணி. எமது வேதனைகள் மேகங்களைப் போல் எம்மைத் தொடர்கின்றன. எமக்கும் காலம் வரும் என்று நான் நம்புகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நேசமித்ரன்
==========
வாங்க நேசன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அந்தக் காட்சிகளை நீங்கள் ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

கவிநயா
=======
வாங்க கவிநயா. வேலை இப்போ குறைந்து விட்டதா? கடவுளைத் தவிர வேறு எவரும் அற்புதம் செய்ய முடியாது என்று நானும் நம்புகிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தமிழ். சரவணன்
===============
உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Shan Nalliah / GANDHIYIST
=============
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. விரைவில் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Ram
====
தகவலுக்கு நன்றி ராம்.

gnani
======
விபரங்களுக்கு நன்றி.

Admin said...

//சுனாமி அழிவுக்குப் பின்னால் ஒரு வருடம் கழித்து நான் ஊர் போயிருந்த போது , ஒரு தகரக் கூடாரமே அவர்கள் வீடாக அந்த வருடம் முழுவதும் , நெருப்பு வெயிலில் அவிந்து கொண்டிருந்த பல குடும்பங்களை நான் அங்கு கண்டேன்.அந்தக் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது.//

எனக்குக் கூட தகரக் கொட்டில்களில் ஒன்றரை வருடம் வெயிலிலே வேம்பவேண்டி இருந்தது. அந்த ஞாபகங்களை மீட்கவைத்துவிட்டீர்கள். சந்தோசமாக ஆரம்பித்து சங்கடமாக முடித்துவிட்டீர்கள்.

படங்கள் அருமை.

"உழவன்" "Uzhavan" said...

இனிவரும் பயணங்களும் இனிமையாக அமையட்டும்.

பா.ராஜாராம் said...

அழகான பயணகட்டுரை ஜெஸ்...காட்சி காட்சியாக விரித்து காட்டிக்கொண்டு போனீர்கள்...பார்த்துகொண்டிருக்கும் போதே வலி உணரவும் தருகிறீர்கள்..நல்ல நடை,தோழி..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சந்ரு said...
//எனக்குக் கூட தகரக் கொட்டில்களில் ஒன்றரை வருடம் வெயிலிலே வேம்பவேண்டி இருந்தது. அந்த ஞாபகங்களை மீட்கவைத்துவிட்டீர்கள். சந்தோசமாக ஆரம்பித்து சங்கடமாக முடித்துவிட்டீர்கள்.//

உங்கள் வேதனையான நினைவுகளைக் கிளறி விட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும் நண்பரே.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//" உழவன் " " Uzhavan " said...
இனிவரும் பயணங்களும் இனிமையாக அமையட்டும்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. உங்கள் வலயத்துக்கும் வருகை தரும் வாய்ப்பும் கிடைத்தது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம் said...
அழகான பயணகட்டுரை ஜெஸ்...காட்சி காட்சியாக விரித்து காட்டிக்கொண்டு போனீர்கள்...பார்த்துகொண்டிருக்கும் போதே வலி உணரவும் தருகிறீர்கள்..நல்ல நடை,தோழி.//

வாங்க ராஜாராம் , எப்படி இருக்கிறீர்கள்.என் பயணக் கட்டுரையை நீங்கள் ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

நிலாமதி said...

உங்கள் இயற்கையை ரசிக்கும் பண்பும் , அதை கதையாக நாம் பார்ப்பது போல சொல்லும் விதமும் பிடித்திருக்கிறது வலை யுலகுக்கு நான் புதிசு இருபினும் உங்க பெயர் பரீட்சயமானது தான் வாழ்த்துக்களும் பதிவுக்கு நன்றிகளும் நட்புடன் நிலாமதி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.