எனது உறவினப் பெண்ணின் நடன அரங்கேற்றத்துக்கு குடும்பத்துடன்சென்றிருந்தேன். இந்த இயந்திர வாழ்க்கையில் உறவினர்களையும்,நண்பர்களையும் இப்படியான தருணங்களில் தான் சந்திக்க முடிகிறது. எதேச்சையாகத் திரும்பிய போது கண்ணன் யாரிடமோ கதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவன் என் அருமைத் தோழியின் தம்பி. இங்குஇலண்டனில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனைக் கண்டு இரண்டுவருடங்களாவது இருக்கும் என்று தோன்றியது. இவன் எப்படி இங்கே வந்தான்என்ற சிந்தனையோடு அவனருகில் சென்றேன். என்னைக் கண்டது தன்அக்காவைப் பார்த்த மாதிரி இருக்கு என்றவன் , '' அக்கா இந்த வருடம் இங்கேவருகிறாள்'' என்றான். '' இது என்ன பெரிய விடயம்? அவள் ஒவ்வொரு வருடமும்தானே லண்டன் வருகிறாள்'' என்றேன். அந்த நகைச் சுவையை இரசித்துச்சிரித்தான். என் தோழி திவ்யா நியூசிலாந்தில் கடந்த 5 வருடங்களாகஇருக்கிறாள். அவள் தம்பி, தங்கைகள் எல்லோரும் இங்கே இருக்கிறார்கள்.ஒவ்வொரு வருடமும் லண்டன் வருகிறேன் என்பாள். பிறகு ஏதோ நடந்துஅந்தப் பிரயாணம் தடைப் பட்டுப் போகும். அவள் வந்த பாடாய் இல்லை. கடிதங்கள் எழுதும் பழக்கம் எங்கள் இருவருக்குமில்லை.திடு திப்பென்று நினைவுவந்தவுடன் தொலை பேசி அழைப்பு மட்டும்தான். எங்களைப் பொறுத்த வரைஎங்கள் நட்புக்கு அது கூடத் தேவையில்லை.ஒருவருக்கு ஒருவர் அவர்களின்துயரங்களில், பிரச்சனைகளில் தோள் கொடுத்து ,சில சமயம் ஒரு தாயின்அரவணைப்புடன் கவலைகளை மறக்கடிப்போம். ஒருவருக்கு ஒருவர் சுமைதாங்கி என்று சொன்னால் சரியாகப் பொருந்தும். சில சமயங்களில் நேரவித்தியாசத்தை மறந்து ,அதிகாலை மூன்று மணிக்கு தொலைபேசியில்அழைப்பாள். நித்திரைக் கலக்கத்தில் ''என்னடி இப்படிப் பண்ணுகிறாய் ?'' என்றால்,'' நினைத்தவுடன் கதைக்க வேண்டும் '' என்பாள். எனக்கும் கண்ணனைக் கண்டது,அவளைக் கண்டதுபோல் மனதுக்கு இதமாகத் தானிருந்தது.
அடுத்த வாரம் அவள் பிறந்த நாள் என்பதும் நினைவில் வந்தது. எதை மறந்தாலும்அவள் பிறந்த தினத்தில் அவளை வாழ்த்த மட்டும் நான் மறந்ததில்லை.முதல்நாள் இரவுதான் அங்கே காலை என்பதால் குறித்து வைத்து உரிய நேரத்தில்அவளை அழைத்தேன். அங்கே அவள் கணவர் தான் பதிலளித்தார். அவர் குரலில்சுரத்தில்லை. திக்கித் திணறி '' அவளுக்குக் கொஞ்சம் சுகமில்லை. இப்போகதைக்க முடியாத நிலையில் இருக்கிறா. பிறகு திவ்யா உங்களை அழைப்பாள்''என்றவர் என் பதிலை எதிர் பாராமல் இணைப்பைத் துண்டித்து விட்டார். எனக்குஏமாற்றம் ஒருபுறம். அதிர்ச்சி ஒருபுறம். எங்கள் நட்பு எப்படிப் பட்டது என்பதைஅவள் கணவர் நன்கு அறிவார். ஒருமுறை தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தபோதே அவள் என்னுடன் கதைத்தாள். '' நீ கதைத்ததை விட இருமிக்காட்டினதுதான் அதிகம் '' என்று கூட நான் அவளைக் கேலி பண்ணினேன்.
தொலைபேசியை வைத்தபடியே ஒருமணி நேரம் சமைந்து போயிருந்தேன்.எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. ஏன் அவள் என்னுடன் கதைக்கவில்லை?அதுவும் பிறந்த நாளன்று...நான் எவ்வளவு ஆவலுடன் அழைத்திருப்பேன் என்றுஅவளுக்குத் தெரியாதா? அல்லது அவள் கணவருடன் ஏதாவது தகராறா? நான்விட்டு விடவில்லை. திரும்பவும் அழைத்தேன். இப்போதும் அவள் கணவர் தான்எடுத்தார். என் குரலைக் கேட்டதும் '' பொறும் அவவைக் கூப்பிடுகிறேன்'' என்றார்.அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒரு மாற்றம் எனக்கு ஏற்கனவே திகிலைக்கொடுத்து விட்டது. திவ்யா அந்தப் பக்கம் வந்ததும் முதலில் வாழ்த்தினேன். '' உன்வாழ்த்துப் பலிக்காது போலிருக்கடி '' என்றவள் விம்மியழத் தொடங்கி விட்டாள்.வாயடைத்துப் போய் என்ன சொல்வது என்றறியாமல் சில நிமிடம் நின்றேன்.அவளே அழுது ஓய்ந்து ,திணறிக் கொண்டு ''எனக்குப் புற்று நோயென்றுஉறுதியான செய்தி இன்றுதான் எனக்குக் கிடைத்தது'' காதில் ரணமாக வலித்தது.என்ன கொடுமையிது? பல்லாண்டு வாழ்க என்று நான் வாழ்த்த வேண்டிய அன்று,கடவுள் அவளுக்கு நாள் குறித்து விட்டேன் என்ற செய்தியை அனுப்பியதுஎன்னை அந்தக் கடவுளையே வெறுக்க வைத்தது.'' கவலைப் படாதே. எத்தனைபேர் குணமடைந்திருக்கிரார்கள்! எல்லாம் சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும்''என்று அவளைத் தேற்றினேன். ''தப்படி'' என்று விரக்தியாகச் சொன்னாள் .இப்போதெல்லாம் டாக்டர்கள் ஈவிரக்கம் பார்க்காமல் நோயாளிக்கு எல்லாவிபரத்தையும் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார்கள்.
அவளுக்குக் கிடைத்த செய்தியுடன் இறுதிக் கட்ட நிலைமை என்பதால் எந்த விதமான சிகிச்சையும் பயனளிக்காது என்று படம் போட்டு விளக்கி யிருக்கிறார்கள். அதை அவள் வாயாலேயே எனக்கு விபரிக்க வேண்டிய நிலைமையில் என் இதயம் சுக்கு நூறாக வெடித்துச் சிதறிய உணர்வில் இந்தப் புறம் அழுவதைத் தவிர என்னால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை. தொலைபேசியை வைத்து விட்டு அந்த இடத்தில் கல்லாகிப் போயிருந்தேன். அவள் சகோதரிகள் அவளிடம் புறப்பட்டால் அவர்களுடன் நானும் போக நினைத்தேன். அவர்களைத் தொடர்பு கொண்டபோது , அவர்கள் அவளை இங்கே அழைத்து ' சிகிச்சை ' செய்யலாம் என அபிப்பிராயப் பட்டார்கள்.
அப்படியே நடந்தது. ஒரே வாரத்தில் திவ்யாவும் அவள் கணவரும் மகனும் இங்கே வந்து விட்டார்கள். பல வருடங்களாக அவளை நேரே காண வேண்டும் என்னுள்ளே தேங்கிக் கிடந்த ஆவல் , ஒட்டிப் போய் ஜீவனற்று , பொய்யான புன்னகையுடன் என்னை அவள் கட்டியணைத்த போது முற்றாக வற்றிப் போயிருந்தது. மற்றவர்கள் போலவே நானும் அனலுக்கு நம்பிக்கைதர முயன்ற போது ,''நீயுமேன் என்னோடு நடிக்கிறாய்?'' என்ற அவள் கேள்வி என்னை ஒருமுறை உலுக்கி விட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் ஓடிப் போனேன். ஒரு வார்த்தை தன்னும் பேசாமல் அவள் கைகளைப் பிடித்த படி அவளருகிலிருந்த கணங்கள் இன்னும் பாரமாய்......சிகிச்சை என்ற பெயரில் வதைபட்டு நாராகிப் படுக்கையில் கிடந்த போதும், வலிந்து எனக்காக அவள் புன்னகைத்தது மனதில் படமாய்... ஒருநாள் வாந்தியெடுக்க அவள் குளியலறைக்கு விரைந்த போது, அவளைத் தாங்கிச் சென்ற என்னை '' உள்ளே வராதே, இரத்தத்தைக் கண்டால் பயந்திடுவாய் '' என்று அந்த நிலையிலும் என் மேல் காட்டிய வாஞ்சை என்னை உருக்கியது. ஒவ்வொரு நாளும் விடை பெரும் போதும் அடுத்த நாள் இவளைக் காண்பேனா? என்ற கேள்வி யெழுந்து கலங்கடித்தது.
அன்று காலை அவள் மூர்ச்சையாகி விட்டதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு விட்டதாகவும் , அவளைப் பார்க்க ஒரு சிலர் தான் அனுமதிக்கப் படுவதாகவும் அவள் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் அவள் கணவர் மூலம் அறிந்தேன். அவள் அனுமதிக்கப் பட்ட இடம் என் வீட்டிலிருந்து ஒரு மணிப் பயணம். நானிருந்த நிலைமையில் என்னால் காரோட்ட முடியாது என்று தெரிந்தது. கணவரை வேலையிலிருந்து உடனே வரும் படி சொல்லி உடனே புறப்பட்டேன். அன்று ஏனோ ஒரு மணிப் பயணம் நீண்டு என்னைத் துடிக்க வைத்தது. காரிலிருந்து இறங்கியதும் அந்த வார்டை நோக்கியோடினேன். நான் அவள் அறை வாசலை யடையவும் '' ஐயோ '' என்ற ஓலம் அறையிலிருந்த வரவும் சரியாக இருந்தது. ''அக்கா, ஒரு நிமிடம் பிந்தி வந்திட்டீர்களே' என்று யாரோ என்னைக் கட்டிக் கொண்டார்கள். எல்லோரையும் விலக்கி அவளருகே சென்ற போது அன்றும் அவள் புன்னகைத்த முகம்தான் என்னை வரவேற்றது. அவள் பட்ட வலியின் சுவடே அந்த முகத்தில் தெரியவில்லை. அவள் கைகள் என்றும் போல் இதமான சூட்டுடன்.....என் முகத்தை அவள் கையில் கடைசி முறையாகப் புதைத்துக் கொண்டேன். அந்த நினைவை நிரந்தரமாக என் மனதிலும் பதித்துக் கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது அவள் கண் மூடும் முன்னர் அவள் தங்கையை என் பெயர் சொல்லியழைத்து '' எங்கே உன்னைக் காணாமல் போய் விடுவேனோ என்று நினைத்தேன் '' என்று சொல்லி கட்டி யணைத்திருக்கிறாள்''. அவளைப் பொறுத்த மட்டில் நான் அவளுக்குப் பிரியாவிடை தந்து விட்டேன். ஒருவேளை அன்றும் நான் அவளருகில் இருந்தால் தாங்க மாட்டேன் என்றெண்ணி ஒரு நிமிடம் முன்னால் போய் விட்டாளோ என்னவோ!
மனிதனின் வாழ்க்கையென்னும் நதி, மரணமென்ற கடலோடு ஒருநாள் சங்கமித்து விடுமென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பேசிய வார்த்தைகள், பார்த்த பார்வைகள் , சேர்ந்து களித்த காலங்கள், உயிரைவிட மேலான உறவுகள் அத்தனையும் இந்த மரணக் கடலோடு அல்லாடிப் போனாலும் அதனால் அடிபட்டுப் போவதில்லை என்பதை அவள் போன பின்பு அனுபவத்தில் உணர்ந்தேன்.
.