''முதலைக் கண்ணீர் வடிப்பது '' என்பது இப்போ சர்வ சாதாரணமாக வழக்கத்திலுள்ள ஒரு பதமாக விட்டது. பொய்யாக ஒருவர்மேல் அனுதாபம் காட்டும் போதோ, இரங்கும் போதோ, நீலிக் கண்ணீர் வடிக்கும் போதோ ,அதனை 'முதலைக் கண்ணீர்' என்கிறோம். ஏன் அதனை முதலைக் கண்ணீர் என்று சொல்கிறோம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? அல்லது உண்மையாகவே முதலை கண்ணீர் வடிக்குமா? அப்படி வடித்தாலும் நீரினுள் அது வடிக்கும் கண்ணீர் யார் கண்ணில் படும்? என்று சிறு வயதில் நீங்கள் யாரையாவது கேள்வி கேட்டதுண்டா? அல்லது நீங்கள் யாருக்கும் முதலைக் கண்ணீர் என்று சொல்லப் போக '' அது ஏன் முதலைக் கண்ணீர்'' என்று யாராவது உங்களை மடக்கியதுண்டா? இல்லையா? அப்போ நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று சொல்லுங்கள். ஆனால் நான் என் பெண்களிடம் நன்றாக மாட்டிக் கொண்டேன். ஆனாலும் ''இப்போ நேரமில்லை. நாளைக்குச் சொல்கிறேன் ''என்று ஒருபடியாகச் சமாளித்து விட்டேன். எப்படியும் பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியான நிலைமையில் '' Can crocodiles cry?'' என்று 'Google' இல் தட்டச்சிட்டு பல சுவாரசியமான விடயங்களை அறிந்து கொண்டேன். அடுத்த நாள் அவர்கள் மறந்தே போய் விட்ட அந்தக் கேள்வியை திரும்ப நினைவு படுத்தி பெரிய மேதாவி போல விளக்கமும் தந்து விட்டேன். நான் சேகரித்த அந்த சுவாரசியமான விடயங்களை இப்போ உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்.
பக்கத்திலிருக்கும் படத்தில் ஒரு அலிகெடோர் முதலையைக் காண்கிறீர்கள். அதன் கண்ணில் இருந்து வரும் கண்ணீர் தெரிகிறதா? இந்தக் கண்ணீர் மனிதரைப் போலவே கண்ணீர் சுரப்பியினால் சுரக்கப் படுகின்றன. இந்த உப்புக் கரிக்கும் திரவம் அதன் கண்களைத் துப்பரவு செய்யவும், முதலை நீரை விட்டு வெளியே இருக்கும் போது வரண்டு போகும் கண்களை ஈரமாக வைத்திருக்கவும் உதவுகின்றது. அதனால் முதலை நீரை விட்டு வெளியில் இருக்கும் போது இதன் கண்களில் நீர் வடிவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளார்கள்.
முதலையின் கண்களில் இருந்து நீர் வடிந்தாலும் அவை உணர்ச்சி வசப் பட்டு அழுவதில்லை. ''முதலைக் கண்ணீர்'' என்ற பதம் பேச்சு வழக்கில் எப்போ சேர்ந்தது என்பது எவருக்கும் சரியாகத் தெரியவில்லை. 13 ஆம் நுற்றாண்டில் ' முதலைக் கண்ணீர்' என்ற பதம் பாவனையில் இருந்ததற்கு ஒரு புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது. பின்னர் 14 ஆம் நுற்றாண்டில் ' Mandeville's Travels' என்ற புத்தகத்தில் முதன் முதலாக தற்போதைய கருத்தை வலியுறுத்தும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.அதற்குப் பின்னர் வந்த ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் நீலித்தனமான அழுகைக்கு ' முதலைக் கண்ணீர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கலிபோனியாவில் செய்த ஒரு ஆய்வின்படி முதலைகள் இரையைக் கவ்வ வாயைத் திறக்கும் போது இதன் கண்ணீர் வெளிவருவதை அவதானித்துள்ளார்கள். கிழேயுள்ள படம் அதனைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கான காரணம் இன்னும் சரியாக விளக்கப் படவில்லை.

'' முதலைக் கண்ணீர் '' என்ற பதம் எப்போ எவரால் வழக்கத்துக்கு வந்தது என்று சரியாகத் தெரியாவிட்டாலும், '' மிகவும் கொடூரமாக உங்களைக் கொல்லக் கூடிய ஜந்துவான முதலை ,உங்களை இரையாக்கும் போது கூட கண்ணீர் வடிக்கக் கூடியது'' என்பதை இந்தப் பதம் வலியுறுத்துவதால் தான் இது காலால காலமும் நிலைத்து இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.
ஆதாரம்
http://www.flmnh.ufl.edu/cnhc/cbd-faq-q6.htm.