நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday, 7 September 2009

யார் குடியைக் கெடுத்தேன்?-பகுதி 2



பெடியங்களை ஊரில் வைத்திருக்கப் பயந்து , மூன்று சகோதரர்களை ஒன்றன் பின் ஒன்றாக பாரிஸ் அனுப்பிவிட்டு , கடைசித் தம்பியுடன் சென்னையில் என் அம்மா இருந்தாள் . என் அப்பா கொழும்பில் ஒரு நண்பர் வீட்டில் , ஒரு அறையில் தங்கியிருந்து வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் என் அம்மாவும் தம்பியும் சென்னை போய் விட்டார்கள் . அவர்கள் புறப்பட்டு சில நாட்களில் நாங்களும் எங்களுக்கென வாடகைக்கு எடுத்திருந்த பிளாட்டுக்கு குடி புக இருந்தோம் . எனது பாடசாலையிலிருந்து எனது மாமனார் வீடு தொலைவில் இருந்ததால் , என் அப்பாதான் வலிந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். என் கணவருக்கோ, அவர் பெற்றவர்களுக்கோ இந்த ஏற்பாட்டில் முதலில் சம்மதமிருக்கவில்லை.'' ஏழு மணிக்கு வேலைக்குப் போவதானால் என் பிள்ளை நாலு மணிக்கு எழுந்து சமைத்து ஐந்தரை மணிக்கு விட்டை விட்டுப் புறப் பட வேண்டும். ஒன்று பிளாட் எடுத்து பாடசாலைக்கருகில் இருக்க வேண்டும். அல்லது என் மகள் வேலையை விடவேண்டும்'' என்று அப்பா தீர்க்கமாகச் சொன்ன பின்னர் எல்லோரும் உடன் பட்டார்கள். அப்போ நான் ஒரு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். இந்த அலைச்சல் என் படிப்பைக் குழப்பி விடும் என்ற ஆதங்கம் என் அப்பாவுக்கு.

ஒரு நல்ல நாள் பார்த்துக் குடி புகுந்தோம். அன்றே அவர் தன்னுடன் ஒருமுறை டாக்டரைப் பார்க்க வரும்படி சொன்னார். என்ன ஏது என்று கேட்க விரும்பாமல் அவருடன் கிளம்பினேன். போகும் வழியில் ஒவ்வொரு மாதமும் இவர் இந்த மனோதத்துவ டாக்டரைப் பார்ப்பதாகவும், கல்யாண வேலைகளினால் இம்முறை தள்ளிப் போய் விட்டதாகவும் சொன்னார். டாக்டரிடம் இவர் என்னை அறிமுகம் செய்து கொண்டார். எனக்கு என்னமோ அந்த டாக்டர் அதிர்ந்து போனது போல ஒரு உணர்ச்சி. எப்போ கல்யாணம் ஆனது என்று கேட்டார். முறைக்குக் கூட வாழ்த்துக்கள் சொல்ல வில்லை. மனதுக்குள் மனநோயாளிகளுடன் பழகி இந்த மனிதருக்கு மனம் மரித்துப் போச்சு என்று திட்டிக் கொண்டேன். அப்போதான் இவர் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது எனக்குத் தெரிய வந்தது. டாக்டரிடம் இவர் நித்திரைக்காகக் கொடுத்த மருந்தை இரண்டு வாரமாகத் தான் பாவிக்கவில்லையென்றும் ஆனால் நன்கு தூங்கியதாகவும் சொன்னார். அவர் மிகவும் கடிந்து கொண்டார்.'' நீ டாக்டரா அல்லது நான் டாக்டரா?'' என்று கூடக் கேட்டார். என்னை முதல் தடவையாக ஒரு பயம் கவ்விக் கொண்டது. அதைப் புரிந்து கொண்டவர் போல என்னைப் பார்த்து அமைதியாக விளக்கம் தந்தார். தான் தரும் மருந்துகளைத் தவறாமல் இவர் சரியான முறையில் எடுக்கிறாரா என்று கண் காணிப்பது இப்போ என் பொறுப்பு என்று சொன்னார். இந்த மருந்துகளை எந்த நிலைமையிலும் தனது அனுமதியின்றி நிறுத்தக் கூடாதென்றும், தவறினால் பழையபடி இவர் மனநோயாளியாக நேரிடும் என்றும் சொன்னார். இவர் நடத்தையில் சிறிய வேறுபாடு தென்பட்டாலும் உடனே தன்னிடம் வரும்படியும் சொன்னார். என் தலை எப்போதோ சுற்றத் தொடங்கியிருந்தது. அவர் சொன்னதில் பாதிதான் என் முளைக்குப் போய்ச் சேர்ந்தது. ஏதோ ஒரு உலகத்தில் ,முகம் தெரியாத மனிதர்கள் நடுவில் அகப்பட்டுப் போனதுபோல அதிர்ந்து கண்கலங்க டாக்டர் தந்த மாத்திரைத் துண்டை பெற்றுக் கொண்டேன். வீடு திரும்பியபோது இவர் என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அந்த டாக்டர் தந்த அதிர்ச்சியில் நான் கதி கலங்கிப் போயிருந்தேன்.

மஞ்சள் , நீலம், கருப்பு, வெள்ளையென்று பல வண்ணத்தில் வாங்கிய மாத்திரைகள் என்னைப் பயமுறுத்தின. தலையிடி வந்தால் கூட மாத்திரை சாப்பிட்டால் உடம்பு கெட்டிடுமென்று தவிர்ப்பவள் நான். இத்தனை மாத்திரைகளை இவர் முழுங்குகிறாரா? என்று நினைத்துப் பதைத்துப் போனேன். அது மட்டுமல்லாமல் அத்தனை மருந்துகளும் இவர் இன்னும் சகல நிலைமைக்கு வரவில்லையென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்லின. வீடு வந்ததும் '' நீர் சரியாகப் பயந்து போனீரா?'' என்று கேட்டார். என் பதிலை எதிபார்க்காமலே அந்த டாக்டர்தான் தேவையில்லாமல் தன்னையும் பயப்படுத்தி தன் தாயாரையும் பயமுறுத்துவதாகவும் சொன்னார். இந்த மாத்திரை எல்லாவற்றையும் தூக்கி எறிந்தால்தான் தனக்கு நிம்மதியென்று இவர் சொன்னபோது , நான் விக்கித்துப் போனேன். எத்தனை பெரிய பொறுப்பு என் தலை மேல் இறங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். கடவுள் என்னைத் தேடியெடுத்து இவர் வாழ்க்கையை என் கையில் ஒப்படைத்திருக்கிறார் என்று நம்பினேன். என் அன்பினால் இந்த மாத்திரைகள் செய்ய முடியாத வித்தைகளைச் செய்து காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.

காலையிலும், மாலையிலும் நானே வற்புறுத்தி மாத்திரை கொடுத்தேன். எனது மனக் கிலேசத்தை இவருக்குக் காட்டாமல் மறைப்பது பெரிய எத்தனமாக இருந்தது. சில சமயங்களில், என்னை முற்றாகப் புரிந்தது கொண்டவர் போல, நான் பேசத் தயங்கிய விடயங்களைப் பேசிக் கொண்டு, ''உமது படிப்பு என்னாச்சு? இன்று எவ்வளவு படித்தீர்?'' என்று என்னை மேற்பார்வை பண்ணிக் கொண்டு , சில சமயம் பெரிய மேதாவி போல பல விடயங்களை அலசிக் கொண்டு, மறு நிமிடம் ஒரு குழந்தை போல ' பிகு' பண்ணிக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி உரத்துச் சிரித்துக் கொண்டு ....இவை ஒன்றிலுமே முழுதாக ஈடுபட முடியாமல் , இவர் செய்வது அத்தனையும் இவரது இயல்பான செயல்கள் தானா? என்று தெரியாமல் நான் அல்லாடிப் போனேன். தனிக் குடித்தனம் வந்தது பெரிய தப்பு என்று தோன்றியது. இவர் எந்தக் கவலையும் இல்லாமல் மாத்திரையும் தூக்கமுமாக இருந்தபோது, என் எண்ணங்கள் யாவும் அவரையே சுற்றிவர , தூக்கம் கெட்டு ஒரு கனவுலகில் வாழ்வதுபோல் என் அன்றாட வேலைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

எனக்கு என் மனப் பாரத்தை எங்கே இறக்குவது என்று தெரிவில்லை. அவர் அம்மா மட்டும் அடிக்கடி வந்து போனாள். அவளும் இரவில் வந்ததால் இவர் முன்பு எதுவும் கதைக்க முடியவில்லை. என் அப்பா அதிகமாக என்னைப் பாடசாலையில் சந்தித்தார். அவருக்குக் குடிப் பழக்கம் இருந்ததால் இதைப் பற்றி கதைக்கப் பயப் பட்டேன். இரண்டு வாரங்கள் இரண்டு வருடங்கள் போல் போய் முடிந்தது. அன்று எதேச்சையாக இவர் தாயார் வந்த போது இவர் வெளியே போயிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைத் தவற விடக் கூடாதென்று நினைத்து நான் அவர்கள் வீட்டுக்குக் குடி வரப் போகிறேன் என்று சொன்னேன். திடுக்கிட்டு அவள் என்னைப் பார்த்த போது, நடந்த விடயங்களைக் கட கடவெனச் சொல்லி முடித்தேன். இவர் இப்போ சாதாரணமாய் இல்லை என்று என் அடிமனம் சொல்வதையும் சொன்னேன். அவள் '' தப்பு செய்திட்டேன். என் பிள்ளைக்கு ஒரு நல்ல துணை கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துத் தான் இந்தத் திருமணத்தைச் செய்தேன்'' என்று சொன்னாள். ஆனாலும் நாங்கள் அங்கே குடிபோனால் என் அப்பாவுக்குக் காரணம் சொல்ல வேண்டியிருக்கும் என்று அவள் மிகப் பயப் பட்டாள். எதற்கும் பயப் பிடவேண்டாம் என்றும் தான் தினமும் வந்து பார்ப்பதாக உறுதி சொன்னாள். எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. சொன்னதுபோல் தினமும் வந்து போனாள், அவளும் ''உரத்துச் சிரிப்பது இவன் சுபாவமில்லை. இப்போதெல்லாம் நெடுகச் சிரிக்கிறான். அடுத்த முறை டாக்டரிடம் சொல்லிவிடு '' என்றாள். இவருக்கு தாயார் தினமும் வருவது பிடிக்கவில்லை. ''மாது என்னை நன்றாகவே கவனிக்கிறாள். நீங்கள் ஒன்றும் அவளை மேற்பார்வை செய்யத் தேவையில்லை'' என்று அவளோடு கோபித்துக் கொண்டார். சிரமப்பட்டு பயணம் செய்து , பார்க்க வரும் அவளிடம் இவர் சினந்து விழுவதைப் பார்த்து, அவளுக்கு வீண் சிரமம் கொடுக்கிறேனோ என்ற மனக் கவலை எனக்கு. '' தேவை என்றால் கூப்பிடுகிறேன். அப்போ வாருங்கள்'' என்று சொல்லி விட்டேன்.

ஒரு தடவை மாத்திரையைக் கொடுத்துவிட்டு கையலுவலாக சமையலறைக்குப் போனவள் ,இவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்தேன். உடம்பு கல்லுப்போல் விறைத்திருந்தது. பதறியபடியே முகத்தில் தண்ணீர் தெளித்தேன். மூச்சு இருந்தது. கலக்கத்துடன் இவர் தாயாரை தொலைபேசியில் அழைத்தேன். '' பயப்பிடாதே! இது சகஜம். தானாக எழுந்திருப்பான்'' என்று சொன்னார். அன்றிரவு முழுவதும் அவர் பக்கத்திலிருந்து அழுது கொண்டேயிருந்தேன். காலையில் தான் கண் விழித்தார். ''நீர் தூங்கவே இல்லையா?'' என்று இவர் பரிவுடன் கேட்டபோது எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. சின்ன விடயங்களுக்கெல்லாம் பயந்து நடுங்கும் நான் இந்த ஒரு மாதத்தில் மிகத் தைரியசாலியாக மாறிவிட்ட உணர்வு.

(தொடரும்)









Thursday, 3 September 2009

யார் குடியைக் கெடுத்தேன்?

வாடகை வண்டியிலிருந்து இறங்கி, அவசரமாக கொழும்பு விமான நிலையத்துக்குள் நுழைகிறேன். தோளில் நான் வழமையாகப் பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் கறுப்புத் தோள்பை . அது மட்டும் தான். வேறு பெட்டி எதுவும் கிடையாது. மூன்று, நான்கு பெட்டிகளைத் தள்ளுவண்டியில் ஏற்றி , கஷ்டப் பட்டுத் தள்ளிக் கொண்டு வரிசையில் நிற்கும் மற்றவர்களுடன் நானும் ஒருத்தியாகச் சேர்ந்து கொள்கிறேன். எங்கள் தெருவிலேயே வசித்த எங்கள் மாமா வீட்டில் ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெட்டி நிறம்ப உடுப்பு, அது இது என்று சுமக்கும் நான் , இன்று .....மாற்றுவதற்கு ஒரு உடை தன்னும் இல்லாமல் ,இந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு, வேலையை விட்டு, சொந்தங்கள், நட்புகள் எல்லாவற்றையும் விட்டு ஓடிக் கொண்டிருக்கிறேன். என் தோள் பையிலிருப்பவை எனது ஒரு சில நகைகளும், நான் பெற்ற சான்றிதள்களும் தான். தற்சமயம் இவை மட்டும் தான் என் சொத்து . எனக்கே இப்போ நடப்பவை கனவா? அல்லது நனவா என்று தெரியவில்லை.

அழவும் தோன்றாமல் , சிரிக்கவும் முடியாமல் அலமந்துபோய் , என்னைச் சுற்றி எதையோ அவசரமாகப் பிடிக்கப் பறக்கும் அந்த மனித கூட்டத்தை வியப்புடன் அவதானிக்கிறேன். இவர்கள் எவருமே என்னைப் போல் வேதனையுடன், முடிவில்லாத பிரச்சனைகளை மூட்டை கட்டிக் கொண்டு இங்கு வந்த்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. பதற வேண்டியவள் நான்....மிக நிதானமாக கடவுச் சீட்டை நீட்டுகிறேன். லக்கேஜ் கேட்ட போது ' ஒன்றுமில்லை' என்கிறேன். எல்லோரும் என்னை விசித்திரமாகப் பார்ப்பது போல் ஒரு உணர்வு. நானிருக்கும் நிலைமையில் இதெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தோன்றவில்லை. கையில்தான் பாரமில்லையே தவிர ,என் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க முடியாமல் நான் சுமந்து நிற்பது, அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.

செக்கின் ( check in ) பண்ணிய பின்னர் , பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தங்கியிருப்பது முள்மேல் இருப்பது போன்ற அவஸ்தையைத் தருகிறது. மெல்ல நகரும் அந்தக் கடிகாரத்தின் நிமிட முள்ளை வெறித்த வண்ணம் உக்காந்த்திருக்கிறேன். '' கடவுளே, இந்த விமானத்துக்குள் நான் ஏறும் மட்டும் என்னைத் தெரிந்தவர்கள் எவரும் இங்கு வந்து விடக் கூடாது . எந்த அசம்பாவிதமும் நடந்திடக் கூடாது'' என்று வேண்டிக் கொள்கிறேன். என் நிலைமையைக் காணக் கடவுளுக்குப் பொறுக்க வில்லை போல் இருக்கிறது. அவர் காப்பாற்றி விட்டார்.

ஒருபடியாக விமானத்தில் ஏறி , என் ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து விட்டேன். இன்னும் ஒரு சில நிமிடங்களில் விமானம் பறக்கப் போகிறது. சில மணி நேரத்தில் நான் சென்னை போய் சேர்ந்து விடுவேன். ஜன்னலூடாக எட்டிப் பார்த்த போது ஏனோ காட்சிகள் மனதைப் பிசைகின்றன. இனிமேல் எப்போ? எப்படி?என் நாட்டில் காலடி வைக்கப் போகிறேன்? என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து என்முன்னே நிற்கிறது. என் இருபத்தி எட்டு வருட நினைவுகளும், உறவுகளும், கனவுகளும் சிறிது சிறிதாகி , பின்னர் முற்றாக மறைந்த போது என் இதயத்தை யாரோ பிடுந்கியெடுத்தது போன்ற உணர்வில் ........வலியினால் துடித்துப் போகிறேன். வாய் விட்டு அழுது விடக் கூடாதென்று என் வாயை இறுகப் பொத்திக் கொள்கிறேன். ஆனாலும் என் கண்களின் பெருககைத் தவிர்க்க முடியவில்லை. என் பக்கத்திலிருந்த மனிதர் மிகவும் இங்கிதமானவர் போல் தெரிகிறது. கதை கொடுத்து என்னைக் கலக்காமல் ஒரு புத்தகத்துக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறார். நடப்பவை எல்லாமே ஒரு கனவாக இருக்கக் கூடாதா ?என்று மனது ஏங்குகிறது. தப்புப் பண்ணுகிறோமோ என்று அடிமனது வேகுகிறது. ' இல்லை, இல்லவே இல்லை , இதைவிட நல்ல முடிவு கிடையாது' என்று மனச் சாட்சி கதறுகிறது. என் மனதுக்குள் இப்படி ஒரு பிரளயமே நடக்கிறது. இந்த உணர்வுகள் அத்தனையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து நடந்தவைகளை மெதுவாக அசை போடுகிறேன்.

நான் ஒரு பாடசாலை ஆசிரியை. வழமைபோல் பாடசாலைக்குப் போவது போல் ,எனக்குப் பிடித்த நீலச் சேலையைக் கட்டிக் கொண்டு , தயாராக மறைத்து வைத்திருந்த என் சான்றிதழ்களையும், விமானச் சீட்டையும் தோள்பையில் அவசரமாகத் திணித்துக் கொண்டு புறப்பட்டேன் . என் கணவர் வாசல் வரை வந்து விடை கொடுத்தார் . குற்ற உணர்வில் குறுகிப் போய் அவர் கண்களைச் சந்த்திக்காமல் தவிர்த்தேன் . தெருமுனையில் முன்னரே ஆயத்தப் படுத்திய வாடகைக் காரில் ஏறி விமான நிலையம் வந்து விட்டேன். என் கணவரை வெறுத்து , கோபித்துக் கொண்டு வீட்டையும் , நாட்டையும் விட்டு ஓடும் மண்டு என்றுதானே நினைக்கிறீர்கள். இல்லை....தப்பு. அப்படி இருந்தால் கூட பரவாயில்லை என்று நான் நினைத்ததுண்டு. என் கணவர் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார். எனக்கு வரும் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று நான் கனவு கண்டேனோ, அதில் ஒரு குறை தன்னும் இல்லாமல் அவர் அமைந்ததில் நான் பூரித்துப் போனவள்.  பதினான்கு  மாதத்துக்கு முன்பு , எங்கள் கல்யாணத்துக்கு வந்தவர்கள் எங்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து பேசித் தீர்த்ததோ! என்னமோ! கண்ணே பட்டதுபோல் விதி எங்களை இப்படி சித்திரை வதை பண்ணி சின்னா பின்னமாக்கி விட்டது.

எங்கள் திருமணம் பெற்றவர்களால் நிச்சயிக்கப் பட்ட பின்னர், அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது உயர்ந்த குணங்களை அறிந்து நான் மகிழ்ந்து போனேன். என்னைப் போல் கல கலவென பேசா விட்டாலும், அவருக்கே உரித்தான அந்த நகைச் சுவையும், மிடுக்கான நடையும், சரளமாகப் பேசிய ஆங்கிலமும், முதல் சந்திப்பிலேயே என்னைக் கவர்ந்து விட்டன. ஆனால் எங்கள் கல்யாணத்தன்று இவர் முகத்தில் தெரிந்த குழப்பமும் , கலவரமும் என்னை திகைக்க வைத்தன . என்ன காரணமாக இருக்கும் என்ற சிந்தனையில் என்றைய தினத்தின் முழுமையான இன்பத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை.

கல்யாண சந்தடியெல்லாம் முடிந்த பின்னர் அவரிடம் கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பப் பார்த்தார். நான் விடவில்லை. அப்போ தயங்கித் தயங்கி என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் நாட்டுக் கலவரத்தில், காடையர்கள் அவர் வீட்டையும் , அன்றுதான் புதிதாக வாங்கிய மோட்டார் வண்டியையும் சேர்த்து எரிப்பதை , பக்கத்து வீட்டு சிங்கள  நண்பர் வீட்டில் ஒழிந்திருந்து தன் கண்ணால் பார்த்து, அதிர்ந்து, கதறவும் பயந்து தவித்த பின்னர் , அவர் அவராகவே இல்லாமல் பித்துப் பிடித்ததுபோல் ஆகி விட்டாராம் என்று சொன்னார். அதை அவரது பெற்றவர்களும் உணர்ந்தபோது, டாக்டரின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைமைக்குத் திரும்பினார் என்றும் சொன்னார். இந்த விடயத்தை எப்படியும் திருமணத்தின் முன் எனக்குச் சொல்ல வேண்டும் என்று தவித்திருக்கிறார். பெற்றவர்கள் சொல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டிருக்கிறார்கள். அதனால் தான் கலவரமான முகத்துடன் இருந்திரு க்கிறார். நான் இதை அறிந்து நெகிழ்ந்து போனேன். இப்படி எனக்கு நடந்திருந்தால் நான் பைத்தியமாகவே போயிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது. அவர் மன நோயாளியாகி, சகல நிலைமைக்குத் திரும்பியதற்கு அவரது மனத் திடம்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் கைகளைப் பரிவுடன் பற்றி ' இனி இதைப் பற்றி நீங்கள் கதைக்கக் கூடாது' என்று சொன்னேன். இந்த விடயத்தைப் பற்றி நான் என் குடும்பத்தவர்களுக்கு மூச்சு விடவில்லை. இதை அவர்களிடம் சொன்னால் இந்த அற்ப விடயத்தை பெரிதாக்கி ஒரு பூகம்பமே உருவாகியிருக்கும். எங்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

( விரைவில் தொடரும்)






Friday, 28 August 2009

விருது வாங்க வாருங்களேன் !


இந்த சுவாரசிய விருது பலர் வலையங்களை அலங்கரித்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இதை யார் ஆரம்பித்து வைத்தவர் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த வலையுலகில் எனக்குக் கிடைத்த அருமை நண்பி சக்தி (வீட்டுப் புறா)
இந்த விருதைக் கொடுத்து என் வலையத்தையும் அலங்கரித்து விட்டார். நன்றி சக்தி.

இந்த விருதை என் வாழ்த்துக்களுடன் சேர்த்து இவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.

தமிழரசி- ---------எழுத்தோசை

ரங்கன்------------இது ஒரு கனவுக் காரரின் பக்கம்

உழவன் -----------உழவனின் உளறல்கள்

அ.மு .செய்யது---மழைக்கு ஒதுங்கியவை

R.Gopi-------------எடக்கு மடக்கு

குமரை நிலாவன்--மனம் பேசிய மெளனங்கள்

நேசமித்திரன்----நேசமித்திரன் கவிதைகள்.

பலருக்கும் இதைத் தர மனமிருந்தாலும், காணும் வலையங்கள் அனைத்தையும் இந்த விருது அலங்கரிப்பதால் எனது பட்டியலை இத்துடன் முடித்துவிட்டேன்.
என்றும் போல் இன்றும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

Tuesday, 25 August 2009

ஜேர்மனியில் சில நாட்கள்

அண்மையில் என் குடும்பத்துடன் ஜேர்மனி போயிருந்தேன். தற்போது என் தாயார் அங்கு இருப்பதால் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறேன். இம்முறை ஒல்லாந்து போய் அங்கு என் சித்தியுடன் சில மணி தங்கி பயணத்தைத் தொடர எண்ணினோம். எப்போதும் காரில் தான் பயணம் செய்கிறோம். லண்டனிலிருந்து கிட்டத்தட்ட பதின் மூன்று மணித்தியால ஓட்டம். எங்களைப் பொறுத்தவரை விமானப் பயணத்தை விட கார்ப் பயணம் மிகவும் சுவாரசியமானது. பல வித சிற்றுண்டிகளும் , கோப்பி, தேனீர் எல்லாம் தயாரித்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது.
மாலையில் சிறிது நேரம் கண்ணயர்ந்து ஓய்வெடுத்திருந்ததால் எல்லோரும் உற்சாகமாகத்தான் இருந்தோம்.
எங்கள் வீட்டிலிருந்து டோவெர் (Dover) துறைமுகம் சுமார் மூன்று மணி ஓட்டம்.
நான் தான் காரோட்டினேன். இங்கிலாந்தில் மட்டும் தான் என்னால் ஓட்ட முடியும் . ஐரோப்பிய விதிமுறைகள் வேறுபட்டவை என்பதால், அங்கு காரோட்ட எப்பவுமே நான் முயலவில்லை . எமக்குப் பிடித்த பாடல்களுள்ள ஒலித்தட்டுக்கள் எங்கள் பயணத்தை ரம்மியமாக்கின. எப்போதும் பாடல்களுடன் சேர்ந்து நாங்களும் பாடுவோம். காரோட்டுபவர் நித்திரை கொள்ளாமல் இருக்க நாங்கள் கையாளும் முறையிது. பொதுவாக டூயட் பாட்டுக்களைத் தெரிவதால் ஒருவர் முறைக்கு அவர் பாடாவிட்டால் நித்திரையாகி விட்டார் என்று அறிந்து காரை நிறுத்தி ஓய்வெடுப்பொம். டோவெரிலிருந்து கப்பல் ( ferry) மூலம் கலை ( Calais ) துறைமுகத்தை வந்தடைந்தோம்.

அப்போ நன்கு விடியத் தொடங்கியிருந்தது. கப்பலில் ஒன்றரை மணிநேரம் சிறிது கண்ணயர்ந்ததால் எல்லோரும் விழிப்பாக இருந்தோம். நாம் கடந்து சென்ற அழகான இயற்கைக் காட்சிகளையும் ரசிகக்u நிலையில் இருந்தோம். பலமுறை நிறுத்தி இளைப்பாறியதால் மதிய நேரம்தான் என் சித்தி வீட்டையடைந்தோம். என் சித்தியை என் கணவரும் , பிள்ளைகளும் முதல் முறை நேரில் காண்கிறார்கள். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
அங்கு மதிய உணவின் பின்னர் சற்று தூங்கி எழுந்தபின்னர் பிற்பகல் ஜேர்மனியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம்.

பலமுறை நாங்கள் அங்கு சென்றதாலும், ஏற்கெனவே பிரபல உல்லாசத் தலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டதாலும், இம்முறை எங்கும் போவதில்லை என்று நினைத்திருந்தோம். ஆனாலும் என் தம்பியின் உந்துதலால்
நாம் ஏற்கனெவே பார்வையிடாத சில உள்ளூர் தலங்களைப் பார்வையிடலாமெனப் புறப்பட்டோம். முதல் நாள் ஹடாமர் என்ற இடத்தில் உள்ள ரோஸ் தோட்டத்தைப் பார்வையிட்டோம். இது ஒரு மலை உச்சியில் ஒரு சிறிய தேவாலயததுக் கருகிலிருக்கிறது. இதன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மிகச் சிரமப் பட்டு அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கிறார்கள் என்று தோன்றியது. நான் கண்ட அந்த அழகு வனத்தின் காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் புகைப் படமாக்கினேன்.


அடுத்தநாள் சிலமைல் தூரத்தில் இருந்த லிம்பேர்க் என்ற நரத்திலுள்ள பதின் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ,ஒரு மலை உச்சியில் அமைந்த தேவாலயத்தைத் தரிசித்தோம். இது பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப் பட்டாலும் உள்ளே காணும் கலை நுட்ப வேலைப் பாடுகள் மிகவும் ஆச்சரியப் படுத்தும் வகையில் இருக்கின்றன. அங்கிருந்து புறப்பட்டு மலையடிவாரத்திலுள்ள நதிக்கரையை வந்து சேர்ந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்த அருவி, பச்சைப் பசேலென இருந்த வெளி, அத்தனையும் இணைந்து தந்த ரம்மியமான சூழல் , மெய் மறக்க வைக்கும் இயற்கைக் காட்சி, என் மனதை இலேசாக்கி இயற்கையின் விந்தையை மெச்சிக் கொள்ள வைத்தன.





முன்பு நாங்கள் ஜேர்மனி வந்திருந்த தருணங்களில், எதையோ தொலைத்துவிட்டுத் தேடும் அவசரத்துடன், பல இடங்களை குறிப்பிட்ட நாட்களில் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. இப்படி சாவகாசமாக நடந்து திரிந்து இயற்கையை ரசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'இத்தனை தூரம் வந்து விட்டோம், அருவியில் வலித்துச் செல்லும் படகில் ஒரு மணி நேரம் போகலாம் ' என்று என் தம்பி சொல்ல, எல்லோரும் அதற்கு இணங்கினோம். சிறிது தொலைவிலுள்ள படகுத் தரிப்பை நாங்கள் அடைந்தபோது நான் கண்ட காட்சியை கிழே புகைப் படத்தில் பாருங்கள்.


இந்தக் காட்சி என்னைச் சிந்திக்க வைத்து கண்கலங்க வைத்து விட்டது. அருவிக்கு மறுபுறத்தில் உல்லாசப் பயணிகள் தங்கியிருந்த காம்பிங் சைட் ( camping site) தான் அதற்குக் காரணம். மாளிகை மாதிரி வீடுகளில் , பல பல உல்லாச வசதிகளுடன் வாழும் மக்கள் , அந்த வாழ்க்கையில் சலிப்படைந்து , விரக்தியினால் , ஒரு மாறுதலுக்காக இங்கே வருகிறார்கள். இங்கே கூடாரங்களில் சில வாரங்கள் இருந்து, பக்கத்திலிருந்த அருவியில் மீன் பிடித்து, ஆதி கால மனிதர்கள் போல் தணலில் உணவைச் சுட்டுத் தின்று கொண்டு இளைப்பாறுகிறார்கள். இது இங்கு சகஜமானாலும் அந்தக் காட்சி , என் தாய் நாட்டில் கல்முனைக் கடற்கரையோரத்தில் நான் கண்ட காட்சியை எனக்கு நினைவு படுத்தி விட்டது. சுனாமி அழிவுக்குப் பின்னால் ஒரு வருடம் கழித்து நான் ஊர் போயிருந்த போது , ஒரு தகரக் கூடாரமே அவர்கள் வீடாக அந்த வருடம் முழுவதும் , நெருப்பு வெயிலில் அவிந்து கொண்டிருந்த பல குடும்பங்களை நான் அங்கு கண்டேன்.அந்தக் காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. எத்தனை பேர் பணத்தை அள்ளி இறைத்தும் பாதிக்கப் பட்ட அந்த துரதிஸ்ட சாலிகள் வாழ்க்கை மாறவேயில்லை. இற்றைவரை அந்த இயற்கைக் காட்சியை ரசித்த என்னால் அதற்கு மேலும் எதனையும் ரசிக்க முடியவில்லை.
எந்தக் காட்சியும், பார்ப்பவர் கண்ணையும், அவர்கள் நெஞ்சையும் பொறுத்துத் தானே ரம்மியமாகிறது. என்னிடம் தெரிந்த இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்னைச் சுற்றி இருந்தவர்களுக்குக் காரணம் தெரியவில்லை. அதைச் சொல்லி அவர்கள் மனதை நோகடிக்கவும் நான் விரும்பவில்லை. விந்தையான உலகம் தான். அவர்கள் அங்கே அப்படி! இவர்கள் இங்கே இப்படி!


.

Wednesday, 19 August 2009

பர்மா அதிசயம்


பர்மாவில் எடுக்கப்பட்ட ,ஒரு அருவிக்கருகில் அமைந்த ,மலையடிவாரக் காட்சியை இந்தப் புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். இதை எவரும் இலகுவாக எடுத்துவிட முடியாது. இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று புரிகிறதா?
இப்போ உங்கள் தலையை இடது பக்கம் சரித்து , இந்தப் படத்தைத் திரும்பவும் பாருங்கள்........புரிகிறதா?
இதே படத்தை நான் நேராகத் திருப்பி இருக்கிறேன் பாருங்கள்.......





பிற்குறிப்பு.

இந்தப் படம் கொரியாவில் சிறுவர் புத்தகத்தில் வரையப் பட்ட ஒரு ஓவியம் என்பதும் இப்படி ஒரு மலையடிவாரம் கிடையாதென்பதையும் ஒரு வாசகர் எனக்கு அறியத் தந்த floraipuyal என்ற பதிவருக்கு என் நன்றி.
மேலதிக விபரங்களுக்கு
http://www.hoax-slayer.com/burma-rock-formation.html


.

Sunday, 16 August 2009

கண்டு பிடியுங்கள்!

நண்பர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. பதில் கண்டு பிடியுங்கள். உங்கள் மூளைக்கு சில நிமிட வேலைதான். சரியான பதிலை யார் சொன்னார்கள் என்று நான் பின்னர் சொல்கிறேன்.
*************************************************************************************
இரண்டு நண்பர்கள் ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். அப்போ அவர்களைச் சந்திக்க ஒரு விருந்தினர் வந்திருந்தார். மூவரும் இருந்த ஆப்பிள் பழங்களைப் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு நண்பரிடம் 3 ஆப்பிளும், மற்றவரிடம் 2 ஆப்பிளும் இருந்தது. ஒவ்வொரு பழத்தையும் மூன்று துண்டுகளாக வெட்டிச் சரி சமமாகப் பகிர்ந்தார்கள். கதைத்தபடி 5 ஆபிள்களையும் முடித்து விட்டார்கள். சந்திக்க வந்த நண்பர் புறப் பட்ட போது அவர்கள் தனக்குப் பகிர்ந்து தந்த ஆபிள்களுக்கு 5 டாலர் கொடுத்து விட்டுப் போனார். அந்தப் பணத்தை நண்பர்கள் எப்படிப் பகிர்வதென்று தெரியாமல் திக்கு முக்காடினார்கள்.
விட்டு விட்டுப் போன குடையை எடுக்கத் திரும்பி வந்த விருந்தினர், அந்தப் பணத்தை சரியாக அவர்களிடையே பகிர்ந்து கொடுத்து அந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தார். கேள்வி இதுதான். இரண்டு நண்பர்களுக்கும் கிடைத்த டாலர் எவ்வளவு? உங்கள் பதிலை ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.



.

Friday, 7 August 2009

கோபம்


ஒரு போதகர் தன் சீடர்களிடம் ஒருநாள் '' நீங்கள் கோபப்படும் போது ஏன் உரத்துக் கத்துகிறீர்கள்? என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? '' என்று கேட்டார். சில நிமிடங்களின் பின்னர் ஒருவர் '' நாங்கள் கோபப் படும்போது எங்கள் அமைதியை இழக்கிறோம். அதனால் தான் சத்தமாகக் கத்துகிறோம் '' என்று சொன்னார்.
போதகர் அந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. '' நீங்கள் அமைதியை இழந்தாலும் கேட்பவர் பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் அவர் காது கிழியக் கத்துவது ஏன்? ஏன் நீங்கள் அதே விடயத்தை கத்தாமல் , மெல்லிய குரலில் சொல்லக் கூடாது ?'' என்று திரும்பவும் கேட்கிறார். எவருக்கும் சரியான பதில் தெரியவில்லை.
அவர் தந்த விளக்கம் இதுதான் . இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் கோபப்படும் போது அவர்களது மனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகித் தூரத்தில் போகின்றன. அதனால்தான் அந்தத் தூரத்தைத் தாண்டி நீங்கள் சொல்லும் சொற்கள் மற்றவரைச் சென்றடைய எங்களையறியாமல் எங்கள் குரலை உயர்த்துகிறோம். எங்கள் கோபம் அதிகரிக்க , அதனால் மனங்களின் இடைவெளி மேலோங்க , அதற்கேற்ப எமது குரலும் மேலோங்குகிறது.

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

என்ன அழகான விளக்கம் இது. நீங்கள் ஆத்திரப்பட்டுப் பேசும்போது மற்றவர் மனங்களைத் தூரத்தில் விலக்கும் வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.


.