நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Wednesday 30 December 2009

ஒரு பேட்டி- மூடு திரை

அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இலங்கைத் தமிழர் நிலைமையை தெட்டத் தெளிவாக விளக்கும் வண்ணம் எடுக்கப் பட்ட இந்தக் காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


Thursday 24 December 2009

நத்தார் வாழ்த்துகள்


இன்று பாரம்பரியமாக கொண்டாடும் நத்தார் பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாகும் அனைவருக்கும் எனதினிய வாழ்த்துகள்.

மனித குலத்தை மீட்பதற்காக மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த குழந்தை இயேசு அனைவருக்கும் அன்பையும், அமைதியையும் ஆனந்தத்தையும் தருவாராக. இல்லாதவர்களுடனும், ஒதுக்கப் பட்டவர்களுடனும் உறவாடிய இயேசு இந்த நேரத்தில் பலதையும் இழந்து கொட்டகைகளிலும் கொட்டும் மழையிலும் அல்லலுறும் எம் உடன் பிறவாத சகோதரர்களுக்கு ஒரு புது வாழ்வும் நம்பிக்கையும் தர வேண்டுமென்று பிராத்திப்போமாக.


.

Wednesday 16 December 2009

ஏன் இந்த பாரபட்சம்?



என் பிரிய மகள் பிரியங்காவை -நான்
பிரசவித்த நாள் தொடங்கி- அவள்
செய்து விட்ட சில்மிசங்கள்
மெய்யாகவே நினைவிருக்கு.


முத்துப்போல் ஒரு பல் வந்ததும்
முதற்சொல் 'மூவா' என்பதும்-அவள்
முதலடி யெடுத்து வைத்ததும்
குறிப்பெடுத்து வைத்திட்டேன்.

காலம் பறந்து விட்டது
குடும்பம் பெருகி விட்டது
சேர்ந்து வந்த சுமைகள் எல்லாம்-என்
சிந்தை நிறைந்து நின்றது.


கிடு கிடுவென படியிறங்கும்
சுட்டி மகள் அனிதாவை
திடுக்கிட்டுப் பார்க்கிறேன்-இவள்
நடக்கத் தொடங்கியதறியாமல்.


.

Monday 7 December 2009

புரிதல்





நீண்ட நேரம் தொலைபேசியில்
நீயிருந்த போதினிலே
மெய்மறந்து கிறுக்கிவிட்ட
காகிதத்தில் உன் பெயர்தான்.


எப்போதும்
அவசரம்
ஏதோ ஒரு பிரச்சனை
நேரம் பஞ்சமாகவில்லை
மற்றவர்கள் வரும்போது.


குடும்பம் என்றால் என்னவென்றும்
மனைவியைப் புரிவது
எப்படியென்றும்
அறிவுரை சொல்கிறாய் நண்பனுக்கு.


மனம் நிறையப் பாரத்துடன்
மௌனமாய் நிற்கிறேன்
'அடியே சொல்' என்றால்
அப்படியே கொட்டிவிட.


காலம் உனக்காகக்
காத்திருக்காது
கரைந்து கொண்டிருப்பது
நம் வாழ்க்கை.


( இது உரையாடல் சமூகக் கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )


.