நான் சிதறி விட்ட வார்த்தைகள் என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் என் மௌனம் என்றுமே என்னைக் கலங்க வைத்ததில்லை.

Monday 27 July 2009

மைக்கேல் ஜக்சனுக்கு ஒரு அஞ்சலி




பிலிப்பினோ நாட்டு சிறைக் கைதிகள் மைக்கேல் ஜக்சனுக்கு தந்த நடன அஞ்சலி இது.சுமார் 1500 கைதிகளின் கடின உழைப்பும் , ஒத்துழைப்பையும் இந்த நடனத்தில் பிரதிபலிக்கிறது. நான் இதை மிகவும் ரசித்தேன். அவரது பிரபலமான மூன் டான்ஸ் செய்வது கடினமென்றாலும் அதையும் லாவகமாகச் செய்த விதம் எனக்குப் பிடித்திருக்கிறது.

.

Sunday 26 July 2009

கல்யாண மோதிரம்

கல்யாண மோதிரத்தை ஏன் நான்காவது விரலில் அணிகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?


( இது மிகச் சுவையானது . தொடர்ந்து படியுங்கள்.)

சீனர் அழகான ,நம்பக்கூடிய விளக்கம் தருகிறார்கள்

பெருவிரல் உங்கள் பெற்றோரைக் குறிக்கும்
ஆள்காட்டி விரல் உங்கள் சகோதரரைக் குறிக்கும்
நடு விரல் உங்களைக் குறிக்கும்
நான்காவது விரல்(மோதிர) உங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும்
சின்ன விரல் உங்கள் பிள்ளைகளைக் குறிக்கும்.
*****

நான் சொல்வது போலச் செய்யுங்கள். உங்கள் இரண்டு கைகளிலும் நடுவிரலை மடித்து, உள்ளங் கைகள் ஒன்றையொன்று நோக்கியவண்ணம் இறுக இணைத்துக் கொள்ளுங்கள். ( கீழேயுள்ள படத்தில் உள்ளதுபோல் மடிக்கப் படாத விரல்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும்.)



இப்போ மற்ற விரல்களை அசைக்காமல் பெருவிரலை (பெற்றோரைக் குறிக்கும் ) மட்டும் விலக்குங்கள். அவை ஒன்றிலிருந்து ஒன்று விலகும். ஏனெனில் உங்கள் பெற்றோர் உங்களோடு வாழ்க்கை முழுதும் இருக்கப் போவதில்லை. என்றோ ஒரு நாள் உங்களை விட்டுப் பிரியப் போகிறவர்கள்.

இப்போ முதல் போலவே எல்லா விரல்களும் இணைந்திருக்க ஆள்காட்டி விரலை(சகோதரரைக் குறிக்கும்) மட்டும் விலக்குங்கள். இதுவும் இலகுவாகப் பிரியும். ஏனெனில் உங்கள் சகோதரர்கள் அவர்களுக்கென தனிக் குடும்பம் வந்ததும் உங்களிடமிருந்து பிரிந்து விடுவார்கள்.

இப்போ அதை போல எல்லா விரல்களையும் இணைத்து ,சின்ன விரலை (பிள்ளைகளை குறிக்கும்)
ஒன்றிலிருந்து ஒன்று விலக்குங்கள். அதுவும் முடியும். பிள்ளைகள் தங்கள் குடும்பம் என்று வந்ததும் உங்களை விட்டுப் பிரிந்து விடுவார்கள்.

கடைசியாக, முன்பு போல எல்லா விரல்களும் இணைந்திருக்க மோதிர விரலை(உங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும்) மட்டும் விலக்கப் பாருங்கள். ...ம்ம் ம்ம் முடியவே முடியாது. ஆச்சரியமாக இருக்கிறதா?
ஏனென்றால் கணவனும் மனைவியும்தான் இன்பமோ, துன்பமோ ,வாழ்க்கை பூராய் இணைந்திருக்கப் போகிறவர்கள்!!


இதை நான் முதலில் படித்த போது எந்தச் சிந்தனையும் இல்லாமல் , காரணம் கேட்கத் தோன்றாமல், நான் அணிந்திருந்த கல்யாண மோதிரத்திற்கு ஏதோ ஒரு சக்தி வந்தது போல் உணர்ந்தேன். இதை என் நண்பர்கள் எல்லோருடனும் பகிர்வதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி.



Friday 24 July 2009

இது அவள்தானா?


அலாரச் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தவன் அசதி மேலிட திரும்பவும் கட்டிலில் சாய்கிறேன். இன்று முப்பதாந் திகதி, ஆபீஸில் மாத இறுதிக் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நினைவு வர துள்ளியெழுகிறேன். குளியலறையில் பல் விளக்கிய வண்ணம் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது , என் கண்ணுக்குக் கீழுள்ள மச்சம் கண்ணை உறுத்துகிறது. இந்த மச்சத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் ' மதி' நினைப்பு தென்றலாக வந்து வீசுகிறது. இந்த மச்சம் தான் என் அழகின் ரகசியம் என்று அவள் கிசுகிசுத்தது இன்று போல் நினைவில் நிற்கிறது. என் நண்பர்கள் 'சந்திரன்' 'மதி' என்ன பொருத்தமடா! என்று எங்களைச் சீண்டியது படம்போல் ஓடுகிறது. மதி! மதி! அவளின் நினைப்பு கொண்டு வந்த விரக்தியான சிரிப்பு கண்ணாடியில் பிரதி பலிக்கிறது.

'சும்மா மச மசவென்று நிற்காமல் கெதியில வெளியால வாங்கோ, நான் கிரியைக் குளிப்பாட்ட வேண்டும் ' என்று என் மனைவி கலா வெளியே கத்துவது கேட்கிறது. இப்படிக் காலையில் எதிலாவது ஆரம்பிக்காவிட்டால் அவளுக்குப் பொழுது விடிவதில்லை போலிருக்கிறது. தினம் ஒரு பிரச்சனையில் தொடங்குகிறாள். அதிலிருந்து இங்கு தாவி அங்கு தாவி கடைசியில் மின்னுவெதெல்லாம் பொன்னென்று நினைத்து என்னைக் கட்டி ஏமாந்து போனேன் என்று ஒரு ஒப்பாரியில் முடிக்கப் போகிறாள். இந்த எட்டு வருட திருமண வாழ்வில் நான் இவளிடம் வாங்கிக் கட்டிய வசவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவள் இன்று தொடங்குவதற்கு முன் வீட்டை விட்டுக் கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் துரிதமாக என் வேலைகளை முடிக்கிறேன்.ஒருவேளை கலா என்னை அன்பாக, ஒரு மனிதனாக, நடத்தியிருந்தால் இந்தக் காலவோட்டத்தில் நான் மதியை முற்றாக மறந்திருப்பேனோ என்னவோ! இவளிடம் திட்டு வாங்கி மனதுக்குள் வெந்து அழும் போதெல்லாம் , எனக்கு ஆறுதல் சொல்ல , அவளது இதமான புன்னகையினால் என்னை மெய் மறக்கச் செய்ய , ' மதி' என்னையறியாமல் என் நெஞ்சில் தஞ்சம் கொள்கிறாள்.

நான் முதன் முதலாக மதியைச் சந்தித்தது பசுமையாக இன்னும் நினைவிருக்கிறது. பல்கலைக் கழக இறுதியாண்டுப் பரீட்சைக்கு நான் படித்துக் கொண்டிருந்த காலமது. இரவைப் பகலாக்கிப் படித்துவிட்டு ,பகலெல்லாம் தூங்கியெழுந்து , மதிய உணவுக்காக சரஸ்வதி லாட்ஜை நோக்கி நடை போட்ட போது, நான் எதேட்சையாக அவளை பஸ் தரிப்பு நிலையத்தில் பார்த்தேன். கண்டவுடன் அவளிடம் என் மனதைப் பறி கொடுத்து விட்டேன். பல திட்டங்கள் தீட்டி ,அவள் பின்னால் திரிந்து அவள் அன்பைத் தேடியது ஒரு பெரிய கதை. மறக்க எத்தனித்தாலும் , அவளுடன் சேர்ந்து களித்த நாட்கள் படம்போல் மனத் திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவள் சிரித்த முகத்தை , எவர் மனதையும் புண் படுத்தாமல் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் தெரிந்தெடுத்து பேசும் லாவகத்தை,........எப்படி நான் மறப்பேன். அவளுடன் பழகத் தொடங்கிய பின்னர் அவள் புற அழகைவிட உள்ளழகை நான் மிகவும் நேசித்தேன். மூன்றே வருடப் பழக்கமானாலும் , என் அம்மாவுக்குப் பின்னர் என்னைப் புரிந்து கொண்டவள் அவள் ஒருத்திதான். விதி சதி செய்து , உள் நாட்டுக் கலவரமென்ற பெயரில் எங்களைச் சிதறடித்து என் மதியை என்னிடம் இருந்து பிரித்து காணாத தூரம் கொண்டு சென்று விட்டது . ஒரு பிரியாவிடை தன்னும் சொல்லிக் கொள்ள முடியாமல் நாங்கள் பிரிந்து போனது என்னை அழவைத்து வேதனைப் படுத்தியதென்பதை அவள் அறிவாளா? என் மதி இப்போ எங்கிருக்கிறாள் என்பது கூட எனக்குத் தெரியாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக , வேலை விடயமாக சிங்கப்பூர் போயிருந்தேன். அன்று முழுவதும் அலைந்து திரிந்த களைப்பில் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். நான் உள்ளே சென்றபோது ,பக்கத்திலிருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் வெளியேறினாள். எதேச்சையாகத் திரும்பியவன் திடுக்கிட்டுப் போனேன். அசப்பில் மதி மாதிரியே இருந்தாள். இல்லை , நிச்சயம் அது மதியேதான். அவள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். என் பக்கம் திரும்பவேயில்லை. ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் , முடுக்கி விட்ட இயந்திரம் போல வேகமாகப் பின் தொடர்ந்தேன். நொடிப் பொழுதில் வந்து சேர்ந்த டக்ஸியில் ஏறிப் போய் விட்டாள். அந்த நிகழ்ச்சி எரியும் தீக்கு எண்ணை வாற்றது போல் ஆக்கி விட்டது. அன்றிலிருந்து ஏனோ இரவும் பகலும் அவள் நினைவு என்னைத் தொடரத் தொடங்கியது. யாரிடமாவது என் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும் போலிருந்ததால், என் நண்பன் ரகுவிடம் சிங்கப்பூரில் நடந்த விடயத்தைச் சொன்னேன். அவன் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்த விதமே என்னைச் சங்கடப் படுத்தி விட்டது. '' என்னடா மச்சான் எத்தனை வருடமாச்சு . இன்னுமா நீ அவளை மறக்கவில்லை?'' அதோடு நிறுத்தாமல் ''நீ அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறாயென்று நினைக்கிறேன். அதுதான் யாரையோ பார்த்து மதியென்று நினைத்துவிட்டாய்.'' என்றான். ஒரு வேளை அவன் சொன்னது சரியாகக் கூடவிருக்கலாம். இல்லாவிட்டால் என் மச்சத்தை வைத்தே மதி என்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பாளே!

பேருக்குச் சாபிட்டுவிட்டு , வேலைக்கு ஓட்டமும் நடையுமாகப் புறப்படுகிறேன். ஏதேதோ நினைவுகளைச் சுமந்து கொண்டு காலை எட்டுமணி பஸ்வண்டியைப் பிடிக்கும் நோக்கத்தில் விரைந்து கொண்டிருக்கிறேன். எதேச்சையாகத் தெருவின் மறுபக்கம் அவளைக் காண்கிறேன். அவள்...அவள்...என் மதி தானே! ஓ , என் மதி என்றா சொல்கிறேன். இப்போ என் மதி கெட்டுத்தான் போய்விட்டது. இதயத் துடிப்பு அதிகரித்து , என்னையறியாமல் கையிலிருந்த ப்ரிவ்கேஸ் தவறி விழுகிறது. பட படப்புடன் அவளருகே யார் நிட்கிறார்களென்று பார்க்கிறேன். பஸ்தரிப்பு நிலையத்தில் பலர் அவளருகே நின்றதால் அவள் யாருடன் வந்திருக்கிறாளென்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இந்த ஒன்பது வருடங்கள் அவளில் பெரிதாக எந்த மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. அவள் பார்வை வராத அந்த பஸ் வரும் திசையிலேயே இருக்கிறது. என் பக்கம் திரும்புவாள் என்ற நம்பிக்கை நகர்ந்து போக , பெரும் எத்தனிப்புடன் அந்த வீதியைக் கடந்து மறு பக்கம் ஓடுகிறேன். எப்படியும் அவளுடன் கதைத்து விட வேண்டுமென்ற அவா மட்டும்தான் மனமெல்லாம் ஓங்கி நிற்கிறது. எனக்குத் தெரியவேண்டும் மதி. இத்தனை வருடங்களாக என் மனதில் தேங்கிக் கிடக்கும் என் கேள்விகளுக்கெல்லாம் இன்று எனக்குப் பதில் வேண்டும் மதி. உனக்குக் கல்யாணமாகி விட்டதா? உன் கணவர் உன்னை நன்றாக வைத்திருக்கிறாரா? நாங்கள் மானசீகமாக வாழ்ந்த வாழ்க்கை உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா? நீ என்னை வெறுத்து விட்டாயா? தினம் நான் உன்னை நினைப்பது உன் நெஞ்சுக்குத் தெரியுமா? எனக்குப் பதில் தெரியவேண்டும்.

இன்னும் சில அடிகள் தான். நான் அவள் முன் போல் நின்று விடுவேன். அப்போதான் அந்தப் பாழாய்ப்போன பஸ்வண்டி வந்து நின்றது. அவள் ஏறிவிட்டாள். ஓடிபோய் அதே பஸ்ஸில் ஏறப் போன என்னை '' கவனம் மதி'' என்று தாங்கியபடியே அவள் பின்னே ஏறிய அவள் கணவனின் (??) குரல் , தடுத்து நிறுத்தி, சுய நினைவுக்குக் கொண்டு வருகின்றது. பஸ்வண்டி பல சுமைகளுடன் புறப்படுகிறது. அதைவிடப் பெரும் சுமையுடன் நான் அது போகும் திசையில் வெறித்துக்கொண்டிருக்கிறேன்.




.

Wednesday 22 July 2009

அழகு நடனம்

தமிழ் பாட்டுக்கு இந்தப் பூனை ஆடும் நடனத்தைப் பார்த்துக் களியுங்கள்.




.

Sunday 19 July 2009

ஊக்கம் தரும் விருதுகள்.


இந்த வாரம் விருதுகள் பல்வேறு திசையில் பறந்து கொண்டிருக்கின்றன . இப்போ அனைவருக்கும் இந்த சுவாரசிய வலையத்துக்கான விருது என்னவென்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.. மற்றைய விருதுகளைப் போல் இதுவும் ஒரு ஊக்கம் தரும் விருது தான். இதனை செந்தழல் ரவி என்பவர் ஆரம்பித்திருக்கிறார். என் அன்புத் தோழி எழுத்தோசை -தமிழரசி எனக்கு மனமுவந்து அளித்துள்ளார்.

விருது பெற்று இரண்டு நாள் ஆகிறது. நான் இதனை ஆறு பேருக்கு கொடுக்க வேண்டும். ஆறு பேரைத் தெரிந்து கொண்டு பதிவு போட ஆரம்பிக்கும் போது நான் தெரிவு செய்தவர்களுக்கு மற்றவர்கள் விருது அளித்துவிட்டார்கள். இப்படியே இரண்டு நாள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. போகும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் எல்லோர் வலையத்தையும் இந்த விருது அலங்கரித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் விருது கொடுக்கும் நண்பர்கள் இதோ

1. ரசனைக்காரி- ராஜேஸ்வரி

2. நேசமிதிரன் கவிதைகள்- நேசமித்திரன்

3. வீட்டுப் புறா -- சக்தி

4.முத்துச் சரம் --ராமலக்ஷ்மி

5. ஒண்ணுமில்லை- ச்சும்மா --.எம் .எம் .அப்துல்லா

6. காதலன் கவிதைகள்- கவிக்கிழவன்.

ஆறு பேருக்கு மட்டும் இந்த விருதைக் கொடுக்கலாம் என்பது இந்த விருதின் விதி முறை. அதனால் நான் ரசிக்கும் மற்றப் பதிவர்களைத் தெரிய முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி விடை பெறுகிறேன்.



.

Saturday 18 July 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது


இது என்ன புது விருது என்று பார்ப்போம் என்ற ஆவலில் நண்பர் ரங்கனின் பதிவைப் படிக்கப் போனேன். என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். பல நாள் ஆசையின் நிமித்தம் இந்த ' Best Friend' விருதை இவர் ஆரம்பித்துள்ளார். அதில் முதல் சுற்றில் என் பெயரையும் கண்டேன். நிச்சயம் நான் கனவு காணவில்லை என்று உறுதியாக்கிய பின்பு இதை எழுதுகிறேன்.நன்றி நண்பரே!

இந்த விருதின் விதி முறைகள்

1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.
2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.
( இது ஜோக் என்றுதான் நினைக்கிறேன்)
3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.

நான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்

1. ரங்கன்--- என்னை நல்ல தோழியாக ஏற்றுக் கொண்டு விருது வழங்கியவர்.

2. தமிழரசி --ரங்கன் இவருக்கு முதலே விருது வழங்கி விட்டாலும் என் விருதும் அவருக்கு நிச்சயம் உண்டு. என்னை அழகாக வலைசரத்தில் அறிமுகம் செய்தது போதாதென்று, சுவாரசிய விருதும் வழங்கிய தோழி இவர்.

3. கவிநயா--வலையத்தில் காலடிவைத்து இரண்டு வாரங்களில் மனமுவந்து பட்டாம் பூச்சி விருதை எனக்கு வழங்கியவர் இவர்.

4. புதியவன்---ஆரம்பத்தில் இருந்தே என் வலையத்தைத் தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்தவர்.

5. Shan Nalliah ---தமிழ் வலயத்தை ஆரம்பிக்கும் எண்ணத்தை முதலில் தந்த நல்ல நண்பர் இவர்.

6. பா.ராஜாராம்.---பின்னூட்டத்தால் மனதைத் தொடுவது மட்டுமல்லாமல் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் நண்பர்.

7. இராயர் அமிர்தலிங்கம்---எனது எழுத்தை மிகவும் ரசிப்பவர். எனக்குத் தெரியாமலே ' பெண்கள் பதிவில்' என் வலையத்தைச் சேர்த்தவர்.

8. குடந்தை அன்புமணி--ஆரம்பத்திலிருந்து ஊக்கம் தரும் நல்ல நண்பர்.

9. ஹேமா---இவர் படைப்புகள் ஏனோ என்னை யாழ்ப்பாணம் இழுத்துச் செல்கிறது. அதனால் ஈர்க்கப் பட்டு பலமுறை இவர் வீடு போய் வருகிறேன்.

ஒன்பது எனது ராசியான இலக்கமென்பதாலும் , மற்றவர்களுக்கும் சில நண்பர்களை நான் விட்டுக் கொடுக்கும் எண்ணத்துடனும் எனது பட்டியலை இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன். எல்லோரும் இந்த விருதை ஆரம்பித்த ரங்கனுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.


.

Thursday 16 July 2009

Balance sheet of ' LIFE'

(Dear friends,
I received this from my friend and would like to share this with you. Sorry I couldn't translate this into Tamil.)


Our Birth is our Opening Balance!

Our Death is our Closing Balance!

Our Prejudiced Views are our Liabilities
Our Creative Ideas are our Assets


Heart is our Current Asset
Soul is our Fixed Asset
Brain is our Fixed Deposit
Thinking is our Current Account


Achievements are our Capital
Character & Morals, our Stock-in-Trade
Friends are our General Reserves
Values & Behaviour are our Goodwill
Patience is our Interest Earned
Love is our Dividend
Children are our Bonus Issues
Education is Brands / Patents


Knowledge is our Investment
Experience is our Premium Account

The Aim is to Tally the Balance Sheet Accurately.
The Goal is to get the Best Presented Accounts Award.


Some very Good and Very bad things ...
The most destructive habit....... ........ .......Worry
The greatest Joy......... ......... .......... ...Giving
The greatest loss.......Loss of self-respect


The most satisfying work........ .........Helping others
The ugliest personality trait........ .....Selfishness

The most endangered species..... ....Dedicated leaders
Our greatest natural resource.... ......... ...Our youth

The greatest 'shot in the arm'........ .Encouragement
The greatest problem to overcome.... ........ ...Fear

The most effective sleeping pill....... Peace of mind
The most crippling failure disease...... .......Excuses

The most powerful force in life........ ........... Love
The most dangerous act......... ..A gossip

The world's most incredible computer.... ....The brain
The worst thing to be without..... .......... ..... Hope

The deadliest weapon...... ........ ........The tongue
The two most power-filled words....... ........ 'I Can'
The greatest asset....... ............. ........ ....Faith

The most worthless emotion.... ......... ....Self- pity

The most beautiful attire......... ......... ........SMILE!
The most prized possession.. ........ ........Integrity

The most powerful channel of communication. ....Prayer
The most contagious spirit...... ......... ......Enthusiasm

Life ends; when you stop Dreaming,
Hope ends; when you stop Believing,
Love ends; when you stop Caring,
And Friendship ends; when you stop Sharing.

.

Friday 10 July 2009

என் பிரிய பபிதா -பகுதி 2

நந்தினி தன் அறைக்குள் பெட்டியடுக்குகிறாள். மெல்லப்போய் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்க்கிறேன். வரும்போது மாற்றிப் போட உடையில்லாமல்தான் இவள் வந்தாள். இப்போ இரண்டு பெட்டி நிறம்ப அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் அம்மம்மாவின் பரிசு. அவளுக்கு இவள்மேல் அன்பும் அபிமானமும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தங்கத்தில் ஏதாவது போட்டு விடுவாள். தோடு, மோதிரம் , சங்கிலியென்று சேர்த்து விட்டாள். அவளை இங்கு வேலைக் காரியாக யாரும் நடத்தியதே கிடையாது. அவள் நினைத்த கறிதான் சமையல். நினைத்தபோது சமையல். புத்தகம் படித்துத் தான் சிற்றுண்டி பண்ணுவாள். சுருக்கமாகச் சொன்னால் இது அவள் வீடு. நாங்கள் எல்லாம் விருந்தினர் தான்.போங்கோ!
அந்த நேரம் பார்த்து என் அக்காவும் தங்கையும் அவள் அறைக்கு வர நான் மெல்ல நகரப் பார்க்கிறேன். அவள் என்னைக் கண்டு விட்டாள்.' வா தம்பி ' என்று கூப்பிடுகிறாள். நானும் போகிறேன். கண்கலங்கியபடி' உனக்கு மாசியிடிச்சு, ஒரு போத்தலில் போட்டு வைத்திருக்கிறேன். ஆத்தா உனக்கு சம்பல் போடுவாள்.' என்கிறாள். எனக்கு அழுகை வந்து விட்டது . அதை மறைக்க முயன்று கொண்டிருந்தேன்.' என் தங்கை பபிதா, இனி உங்க கூடத்தான் இருக்கப் போறாள். அவள் சின்னப் பொண்ணு .ஏதும் தெரியாம தப்புப் பண்ணினால் பொறுத்துக் கொள்ளுங்கோ. என்னைப் பார்த்ததுபோல் பார்த்துக் கொள்ளுங்கோ' என்கிறாள். எனக்கு இது புதுச் செய்தி. யாரும் என்னிடம் இப்படி நந்தினி தங்கை வேலைக்கு வருவதாகச் சொல்லவில்லை. அதைப் பார்த்தால் ஒரு சின்ன வட்டுப் போல் இருக்கிறது. அது இங்கு என்ன செய்யப் போகிறது என்று நினைத்துக் கொண்டு கூடத்தில் என்ன நடக்கிறதென்று பார்க்க ஓடுகிறேன்.

அங்கு அம்மாவின் குரல் பலமாகக் கேட்கிறது. ' இது சரிவராது. தயவு செய்து உன் பிள்ளையைக் கூட்டிப் போ. இன்னும் இரண்டு வருடத்தில் கூட்டி வா. நான் வைத்துக் கொள்கிறேன்' என்கிறாள். அம்மம்மாவும், 'உன் கஷ்டம் எனக்கு விளங்குதையா, ஆனால் இது சின்னப் பிள்ளை . இவளை நாங்கள் வைத்திருந்தால் சட்டப் படி குற்றம். எங்களை வம்பில மாட்டி விடாதேப்பா' என்கிறாள். அப்போதான் நான் அந்த சின்னப் பொண்ணைத் திரும்பிப் பார்த்தேன்.
என்னை விட இவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு வயது கூட இருக்கலாம். அப்போ பதின் மூன்று வயதுதான் இருக்கும். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இவர்கள் எல்லாம் இவளைக் கொண்டு போ என்று சொல்ல விஷயம் புரியாமல் அலங்க மலங்க முழித்துக் கொண்டு இருந்தாள். முகம் அதே கறுப்பு. குட்டி நந்தினியேதான். ஆனால் இவள் கண்ணில் தெரிந்த குறும்பு எனக்குப் பிடித்தது. இவள் நந்தினி மாதிரி என்னை மாட்டி விடமாட்டாள் என்று தோன்றுகிறது. அப்படியே ஜன்னல் அருகில் ஒரு கதிரையை எடுத்துப் போட்டு உட்கார்ந்து கொள்கிறேன்.

அப்போதான் நந்தினி பெட்டியுடன் வருகிறாள். வந்தவள் அம்மம்மா காலடியில் இருக்கிறாள். அவள் தலையைத் தடவிவிட்டபடி அம்மம்மா விக்கி விக்கி அழுகிறாள்.அவள் இப்படி அழுது நான் பார்த்ததேயில்லை. 'நந்தினி ஒரு தங்கம் ஐயா, நல்ல இடத்தில் தானே குடுக்கிறாய்' என்று தகப்பனிடம் கேட்கிறாள்.அவர் தன் சொந்தத்தில் தான் பார்த்ததாகச் சொல்கிறார். இப்போ நந்தினி வாயைத் திறக்கிறாள். '' என்னைப் பற்றிக் கவலைப் படாதே ஆத்தா! நான் ராசாத்தி போல இங்கே இத்தனை நாள் இருந்திட்டேன். என்னைப் பார்த்த மாதிரி என் தங்கச்சியையும் பார்த்துக் கொள் . இவள் மூன்று நேரம் சாப்பிட்டாலே போதும் எனக்கு' என்று அம்மம்மா காலைப் பிடித்துக் கொள்கிறாள். அதற்கு அவள் 'இவள் சின்னப் பிள்ளையடி. நான் பெரியவளைக் கொண்டு வருவீர்கள் என்றுதான் ஓமென்றேன்.' என்கிறாள். பெரியவளுக்கு ஆஸ்மா நோயாம் . அடிக்கடி ஏலாமல் போகிறதாம். அதனால்தான் இவளைக் கூட்டி வந்திருக்கிறார். தகப்பன் அழாக் குறையாக கெஞ்சுகிறார். எனக்குக் கண் கலங்கி விட்டது. அப்போதான் நந்தினி அவள் தங்கையின் காலை அம்மம்மாவிடம் காட்டுகிறாள். சூடு போட்ட காயமாம். எனக்குத் தூரத்தில் தெரியவில்லை. எங்கோ இவளை வேலைக்கு விட்டார்களாம். இவள் விலையுயர்ந்த பூச் சாடியொன்றை கைதவறிப் போட்டு உடைத்து விட்டாளாம். . அதற்குச் சூடு போட்டிருக்கிறார்கள். ' அட கடவுளே , இந்தப் பச்சைக் குழந்தைக்கு இப்படிப் பண்ணினார்களா , பாவிகள்' என்று திட்டுகிறாள் அம்மம்மா . அத்துடன் பபிதாவை வைத்திருக்க முடிவு செய்து விட்டாள் என்று தெரிகிறது.

'பிள்ளையோடு பிள்ளையாய் அது இங்கு இருந்திட்டுப் போகட்டும். அவள் இங்கு வேலைக்கு இருக்கிறாள் என்ற நினைப்பு உனக்கு வேண்டாம்' என்கிறாள். 'அவள் என்னைவிட சமத்து ஆத்தா, சொல்லிக் குடுத்தா கத்துப்பாள். நீ எனக்குச் செய்ததில் இது தான் பெரிய உதவி '' என்று அழுதபடியே புறப்படுகிறாள் நந்தினி. அவர்கள் பின்னால் அழுது கொண்டே ஓடுகிறாள் பபிதா. அம்மம்மா என்னை அவர்களுடன் ஸ்டேஷன் வரை போய் வரும்படி சொல்கிறாள். பபிதாவும் எங்களுடன் வருகிறாள். போகும் வழியில் நந்தினி இவளுக்கு எங்கள் எல்லோரையும் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறாள். என்னைப் பற்றியும் நல்ல தனமாகத் தான் சொல்கிறாள். ஆனால் இவள் எதையும் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.



திரும்பி வரும்போது இவளிடம் ' உனக்கு எத்தனை வயது' என்று கேட்கிறேன். 'பதின் நாலு' என்று சொல்கிறாள். நம்ப முடியாமல் ' பிறந்த திகதியச் சொல்லு' என்கிறேன். அதற்கு அந்த மண்டு ' சித்திரை வருசமன்று தான் நான் பிறந்தேன். எல்லாரும் என் பிறந்த தினத்துக்கு வெடி போடுவார்கள்' என்கிறாள். அடக்க மாட்டாமல் சிரிக்கிறேன். நான் சிரித்ததும் அவள் முகம் அப்படியே வாடிப் போய் விடுகிறது. 'நான் தப்பாய் ஏதும் சொன்னேனா? ' என்று கேட்கிறாள். ' இல்லை இனிமேல் நாங்களும் உன் பிறந்த தினத்துக்கு வெடி போடுவோம் என்று நினைத்துச் சிரித்தேன்' என்கிறேன்.

சும்மா சொல்லக் கூடாது. இவளும் நல்ல சுறு சுறுப்பு. நந்தினி மாதிரியே ஓடி ஓடித் திரிவாள். அம்மம்மா இவளைக் சமையல் கட்டுக்கு மட்டும் விட மாட்டாள். மரக் கறி கூட வெட்ட விடமாட்டாள். இவள் கொஞ்சமும் சுத்தம் கிடையாது. தினமும் காலையில் அம்மம்மா இவளிடம் பல்லுத் தீட்டு, குளிச்சியா?, தலை சீவினியா ? என்று கேட்கும் சத்தத்தில் தான் நான் கண் திறப்பேன். அம்மம்மா கத்திக் கத்தி இவளை உடுப்பு மாற்ற வைப்பாள். வில்லங்கத்துக்கு உடுப்பு மாற்றி வந்ததும் அடுத்த நிமிடம் மண்ணில் குந்துவாள். ஒரு வாரத்தில் எல்லோருடனும் சுமுகமாகப் பேசத் தொடங்கி விட்டாள். அவள் நல்ல வாயாடி கூட. எனக்கென்னமோ இவள் பையனாய்ப் பிறக்க வேண்டியவள் தப்பிப் போய் பெண்ணாகப் பிறந்து விட்டாள் என்று தோன்றுகிறது.

எங்கள் வீட்டில் பழ மரங்களுக்குக் குறைவில்லை. இவளுக்குப் பழமென்றால் உயிர். காலையிலிருந்து மாலைவரை பழம் தின்ற படியே இருப்பாள். ஆளைக் காணோம் என்று பார்த்தால் மாமரத்தில் இருப்பாள். இவள் இங்கு வந்த பின்னர் தான் பனங் கிளங்கைக் கண்டாள். எங்கள் வீட்டுக்குப் பின்னால் பனங் காடு. நானும் அவளும் போய் பனங் கொட்டை புறக்கி வருவோம். கிணற்றையும் துலாவையும் முதல் தரம் கண்டபோதும் துள்ளிக் குதித்தாள். ' இங்கே பார் தம்பி' என்று கூப்பிட்டு துலாக் கயிற்றில் தொங்கி மேலே போய் வித்தை காட்டுவாள். எதைக் கண்டாலும் கண்களை அகல விரித்து அவள் பார்க்கும் போது இது இவளுக்குப் புதிது என்று எங்களுக்குப் புரிந்து விடும்.

மூன்று மாதம் எப்படியோடியது என்று தெரியவில்லை. ' அடியே, பபி ' என்று அம்மம்மா பலமுறை கத்தியபின்புதான் என்னவும் செய்வாள். இண்டைக்கு உன்னை அனுப்புகிறேன், நாளைக்கு உன்னை அனுப்புகிறேன் என்று மிரட்டிக் கொண்டு இருந்தாலும் , அம்மம்மா பபிமேல்லுள்ள இரக்கத்தினாலும் ,அன்பினாலும்தான் அவளை எங்களுடன் சேர்த்துக் கொண்டாள் என்று எங்களுக்குப் புரிந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை , அம்மம்மா காலையில் சீயாக்காய் அவித்து விட்டாள். ஒவ்வொருவராக முழுக்கெடுத்த பின்னர் தான் சாப்பாடு தருவாள். இதுதான் எங்கள் வீட்டு வழக்கம். அன்று என் நண்பன் சிவாவின் பிறந்த தினம். அவன் வீட்டில் எனக்கு மதியச் சாப்பாடு. அதனால் நான் முதலே முழுகிவிட்டுப் புறப்படுகிறேன். நான் புறப்பட்ட போது பபி வாசலில் கோழிக் குன்சுகளைக் கலைத்துக் கொண்டு ஓடுகிறாள். அம்மம்மா தலைக்கு நிறைய எண்ணெய் வைத்து விட்டிருக்கிறாள். ''உன்னைப் பார்க்கச் சகிக்கலை.' என்று சொல்கிறேன்.
'நீயும்தான்' ' என்றவள், எனக்கு ' வெவ்வெவ்வே' என்கிறாள்.

நண்பன் வீட்டில் சுமார் மூன்று மணி நேரம் இருந்திருப்பேன். திரும்பி வந்தபோது தெருமுனையில் எங்கள் வீட்டுக்கு முன்னாள் அந்தத் தெருவே கூடி நிற்பது தெரிகிறது. நெஞ்சு பதைக்க பாய்ந்து ஓடுகிறேன். அம்மம்மா என்னைக் கண்டதும் ஓவென்று அழுகிறாள். என் அக்காவும், தங்கச்சியும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். அப்பா அப்போ ஊரில் இல்லை. எங்கே பபி? திக்கென்று இருக்கிறது. 'என்னாச்சு அம்மம்மா?' என்று கலக்கத்துடன் கேட்கிறேன். ' அந்தப் பாவி மகள் இப்பட்டிப் பண்ணிட்டாளே!'' என்று ஒப்பாரி வைக்கிறாள். இவளிடம் கதை கேட்க முடியாது என்று தெரிய சித்தியிடம் ஓடுகிறேன். அவள்தான் தேம்பித் தேம்பிக் கதை சொல்கிறாள். குளிக்கப் போன பபி வழமை போல் துலாக் கயிற்றில் தொங்கி விளையாடி இருக்கிறாள். அப்போதான் அம்மம்மா கண்டு கிணத்துக்குள் விழப் போராயடி என்று கத்திவிட்டு வந்திருக்கிறாள். இவள் விழுந்த சத்தம் கேட்டு அம்மம்மா கூக்குரல் போட்டிருக்கிறாள். சித்தப்பா உடனே கிணற்றுக்குள் குதித்து அவளைத் தூக்கியிருக்கிறார். பலரும் வந்து கஷ்டப்பட்டு அவளைத் தூக்கியிருக்கிறார்கள். முதலுதவி செய்தபின் காரில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு அவள் உயிர் போய் விட்டது.

பைத்தியம் பிடித்தவன் போல் ' எண்ட பபி ' என்று கத்திய படி கிணற்றுப் பக்கம் ஓடுகிறேன். அக்காவும் அம்மாவும் என் பின்னால் ஓடி வருகிறார்கள். கடைசியாக அவள் எனக்குச் சொன்ன 'வெவ்வெவ்வே' ' மனதில் கனக்கிறது. அவள் மாற்ற வைத்த உடை வேலியில் தொங்குகிறது. அவள் போய்விட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. சிலையாக கிணற்றையே பார்த்தபடி இருக்கிறேன். அதற்குள் அம்மம்மா மயங்கி விழுந்து விட்டாள். எல்லோரும் அவளைப் பார்க்க ஓடுகிறார்கள். என்னைத் தண்ணி கொண்டுவரச் சொல்கிறார்கள். செம்பை எடுக்கக் குசினிக்கு ஓடுகிறேன். அங்கே பபியின் சாப்பாட்டுத் தட்டில் அம்மம்மா போட்டு வைத்த சாப்பாடும் அவளுக்குப் பிடித்த பப்பாசிப் பழமும் என்னைப் பார்த்து ' வெவ்வெவ்வே'' என்கிறது.



.

Wednesday 8 July 2009

என் பிரிய பபிதா

(இது ஒரு உண்மைக் கதை. கூடு விட்டுக் கூடு பாய்ந்து , பெயர்களையும் மாற்றி விட்டிருக்கிறேன்)

என் அறை ஜன்னல் திரைச் சீலையை மெல்ல விலக்கி , பக்கத்துக் கூடத்தில் என்ன நடக்கிறது என்று நோட்டமிடுகிறேன். நான் அங்கு வரக் கூடாதென்று அம்மா கட்டளை போட்டுப் போய்விட்டாள். பெரியவர்கள் கதைக்கும் போது நான் அங்கு வாய் பார்க்கக் கூடாதாம். ஒவ்வொரு முறையும் இவள் இப்படிக் கட்டளை போட்டு சும்மா இருக்கும் எனக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறாள். நான் அங்கு போகாவிட்டாலும் ஒட்டுக் கேட்பதும் ஒழித்திருந்து பார்ப்பதும் எனக்குச் சகஜமாகி விட்டது.
இன்று என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு ஓரளவு தெரியும். காலையில் அம்மம்மா மிகவும் கவலையாக எங்களிடத்தில் சொன்னாள். நந்தினி இன்று ஊருக்குப் போகப் போகிறாள். அவளைக் கூட்டிப் போக அவளது தகப்பன் இன்று ஊரிலிருந்து வருகிறார். இவள் அதுதான் ஒரு வாரமாக மூக்கைச் சிந்தியபடி இருக்கிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நந்தினிக்கு இன்னும் இரண்டே வாரத்தில் கல்யாணமாம். அதற்கு இவள் சந்தோஷப் படவல்லவா வேண்டும்? அதற்கு மாறாக ' நான் இங்கேயே உன்னோட இருக்கிறேன் ஆத்தா' என்று என் அம்மம்மா விடம் முனகிக் கொண்டு இருக்கிறாள். எனக்கு இவள் போவதில் எந்த வருத்தமும் கிடையாது. சரியாகச் சொல்லப் போனால் ஆனந்தம் என்றுகூடச் சொல்லலாம். ' நீ என்னைப் படுத்தியது போதும். உன்னைக் கட்டப் போற அந்த மடையனைப் போய்ப் படுத்து ' என்று மனதுக்குள் அவளைத் திட்டிக் கொள்கிறேன்.
கூடத்தில் அம்மாவும், அம்மம்மாவும் கதிரையில் இருக்கிறார்கள் .கதவடியில் சுவரில் முதுகைச் சாய்த்தபடி நிலத்தில் நந்தினியின் அப்பா சம்மணம் கட்டியிருக்கிறார். அவர் பக்கத்தில் ஒரு சின்னப் பொண்ணு ஒன்றும் இருக்குது.
ஒருவேளை அது இவளின் தங்கையாக இருக்கலாம் என் நினைத்துக் கொள்கிறேன். ஊதிவிட்டால் மனிதன் விழுந்து விடுவான் போல ஒரு தோற்றம் . பல இடங்களில் கிழிந்து , ஒட்டுப் போட்ட ஒரு பழுத்த வேட்டி, முழுதாக நரைத்த தலை. அந்த மனிதரைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கிறது. இவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன். நந்தினியின் அம்மா சுகமில்லாமல் இருந்த போது அவளைக் கூட்டிப் போக வந்திருந்தார். இந்த இரண்டு வருடத்தில் பத்து வயது கூடியது மாதிரி மாறிப் போய்விட்டார். பாவம் அவருக்கு ஐந்து பெண் பிள்ளைகளாம். அவரும் அவர் மனைவியும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தார்களாம். இப்போ அவர் மனைவி முடியாமல் படுக்கையில் இருக்கிறாளாம். நந்தினி குடும்பத்தில் மூத்தவளாம். என் அம்மா வேலைக்குப் போவதால் , எங்களைக் கண்காணிக்கவும் ,அம்மம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கவும் , அம்மா படிப்பித்த பாடசாலை கன்னியாஸ்திரிகள் மூலம் நந்தினி எங்கள் வீட்டுக்கு வேலைக்காரியாக அறிமுகமானாள். ஒருவருடம் என்று வந்தவள் இப்போ மூன்று வருடத்துக்கு மேலாக இருந்து விட்டாள்.
நந்தினி கறுப்பென்றாலும், நல்ல முகவெட்டு. எந்த நேரமும் சிரித்த முகம். பார்த்தவுடனே அவளை எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போய் விட்டது. எந்த வேலையையும் ஓடி ஓடித் தான் செய்வாள். அம்மம்மாவை மிகவும் அன்பாகக் கவனித்துக் கொண்டாள். அவள் எங்கே போனாலும் இவளும் நானும் வருகிறேன் என்று ஒட்டிக் கொள்வாள். வந்ததும் அவளாகவே அம்மம்மாவை 'ஆத்தா' என்று கூப்பிடத் தொடங்கி விட்டாள். என்னைத் 'தம்பி' என்று கூப்பிடுவாள். எனக்குப் பிடித்த மாசிச் சம்பல் தினம் செய்து தருவாள். ஆனாலும் இவள் மேல் எனக்குக் கொள்ளை ஆத்திரம். ஏன் தெரியுமா? இவள் வந்த பின்பு நான் வீட்டில் அடி வாங்குவது அதிகமாகி விட்டது. என்ன தப்புச் செய்தாலும் உடனே அம்மம்மாவிடம் போட்டுக் குடுப்பாள். பிறகு சொல்ல வேண்டுமா? அம்மம்மா முருங்கைக் கிளையொன்றை முறித்துக் கொண்டு வந்து விடுவாள்.
ஒருமுறை நானும் பக்கத்து வீட்டு ரவியும் சேர்ந்து , முத்து அக்கா வீட்டு மரத்திலேறி கள்ளமாக மாம்பழம் பிடுங்கினோம். இவள் அதனை எப்படியோ மோப்பம் பிடித்து வத்தி வைத்து விட்டாள். அதுகூடப் பரவாயில்லை. அன்று நான் சுற்றிச் சுற்றியோடி அடி பலமாய்ப் படாமல் தப்பித்துக் கொண்டேன். ஆனால் பிறிதொரு நாள் , அம்மாவும் , அப்பாவும், சித்தியும் படம் பார்க்கப் புறப்பட்ட போது நானும் வருவேன் என்று அடம் பிடித்தேன். அம்மா கண்டிப்புடன் ,' இந்தப் படம் பார்க்க உனக்கு வயது பத்தாது' என்று சொல்லி வீட்டில் விட்டுப் போனபோது ஆத்திரம் தாங்க முடியாமல் நான் ஆசையாக விளையாடும் பொருட்களை எல்லாம் போட்டு உடைத்தேன். அதோடு விடாமல் என் புத்தம் புதுச் சட்டையொன்றை , என் ஆத்திரம் தீருமட்டும் தூள் தூளாக வெட்டிப் போட்டேன். பின்னர் அவர்கள் வருமுன் எல்லாத் துண்டுகளையும் பொறுக்கியெடுத்து குப்பையில் எறிந்து விட்டேன். இதனை இந்த நந்தினி எப்படிக் கண்டு பிடித்தாள் என்று எனக்குத் தெரியாது. அடுத்த நாள் எனக்குச் செம அடி வாங்கித் தந்து விட்டாள். அந்த நாளிலிருந்து நான் அவளிடம் மிகவும் கவனம். என்ன செய்வதென்றாலும் அவள் பக்கம் ஒரு கண் வைத்துக் கொள்வேன்.
( தொடரும்)



.